7 தமிழர்கள் விடுதலை.. ஆளுநர் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை .. சிவி சண்முகம்
சென்னை: 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் ஆவணம் கிடைத்த பிறகுதான் அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க முடியும் என சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உரிமை இருக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தமிழக அமைச்சரவை ஒன்று கூடி அவர்கள் எழுவரையும் விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநரிடம் ஒப்படைத்தது.
இந்த தீர்மானம் ஆளுநருக்கு கிடைத்து 2 ஆண்டுகள் ஆனநிலையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து தனது தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய பேரறிவாளனின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் முடிவை கூற ஒரு வார காலஅவகாசம் வழங்கப்பட்டது. எனினும் அவர் ஒரு வாரத்திற்கு மேல் கால அவகாசம் எடுத்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை தனது நிலைப்பாடை தெரிவித்தார்.
7 தமிழர்கள் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளது என கூறி தமிழக அமைச்சரவை தீர்மானத்தை நிராகரித்தார். இது தமிழக அரசுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.