3வது முறையாக வெற்றி கிட்டுமா?... விழுப்புரத்தில் மீண்டும் சிவி சண்முகம் - பயோடேட்டா
சென்னை: விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் கூட மீதமில்லை. கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதிகள் பங்கீடு குறித்தும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முதற்கட்டமாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகமும், சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதனும், நிலக்கோட்டை தனிதொகுதியில் எஸ். தேன்மொழியும் போட்டியிடுகின்றனர். இதில், விழுப்புரத்தில் களம் காணும் வேட்பளார் சிவி சண்முகம் பயோடேட்டா குறித்து இங்கே பார்க்கலாம்.
சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள சி.வி. சண்முகம் தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி. யாக பணிபுரிந்தவர். சண்முகத்திற்கு கௌரி என்ற மனைவியும், ஜெயசிம்மன் என்ற ஒரு மகனும், வள்ளி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
2001 - திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல்முறை அதிமுக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார்.
2006 - மீண்டும் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று அதிமுக எம்.எல்.ஏவாக தேர்வானார்.
2011 - இம்முறை விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2016 - மீண்டும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2006 வரை கல்வி, சட்டம் மற்றும் வணிக வரித்துறை, பத்திரப்பதிவு அமைச்சராக இருந்துள்ளார். இதையடுத்து 2011ஆம் ஆண்டு முதல் 2012 வரையும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அப்போது, தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த சி.வி. சண்முகத்தை ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். அந்த சமயம் சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ஆகியவற்றின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனித்து வந்தார். அதிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
தற்போது சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கம் மற்றும் தாதுக்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி களம் என்பது திமுக vs அதிமுக தவிர வேறு எதையும் பார்த்தது கிடையாது. குறிப்பாக 1996 முதல் பொன்முடி vs சிவி சண்முகம் மோதல் அனல் பறந்து வருகிறது. 1996, 2001, 2006ல் திமுக சார்பில் பொன்முடி வெற்றிப் பெற, 2011, 2016ல் சிவி சண்முகம் தொகுதியை கைப்பற்றினார்.
விழுப்புரம் தொகுதியில் சட்டக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள், ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம், நந்தன் கால்வாய், வீடூர் அணை புனரமைப்புப் பணிகள், கோலியனூரான் வாய்க்கால் தூர்வார தனித்திட்டம் ஆகியவற்றால் சி.வி.சண்முகத்துக்கு ஓரளவுக்கு பெயர் இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், 2011 தேர்தலில் சி.வி.சண்முகத்திடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த பொன்முடி, 2016 தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் சி.வி.சண்முகத்திடம் மோத வைக்க இந்நேரம் திமுக தலைமை முடிவெடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications