அனுமதியின்றி ஒரு செங்கல்லைக் கூட நட முடியாது.. கர்நாடகாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்..!
சென்னை : காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது எனவும் எந்த காரணத்தைக் கொண்டும் தமிழகத்தின் இசைவு இல்லாமல் யாரும் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்ச விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு கூறி வருகிறது.

மேகதாது விவகாரம்
மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினார்கள். இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

செங்கலை கூட நட முடியாது
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் இசைவு இல்லாமல் யாரும் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், " மேகதாது விவகாரத்தில் கர்நாடகா எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ, அதேபோல் நமது நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாக இருக்கிறோம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கீழே இருக்கிற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் உத்தரவு கொடுத்திருக்கிறார்கள். தண்ணீர் ஓடி வந்தால் மேலே இருக்கிறவர்களுக்கு சொந்தமில்லை என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.ஆகவே, எந்த காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் யாரும் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது. கர்நாடக அரசுக்கும் அது தெரியும்.

மத்திய அரசு சாய்ந்துவிடாது
சுப்ரீம் கோர்ட் சொன்னால் என்ன, நாங்கள் செய்வோம் என்றால் எப்படி? உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது, அதற்கு கீழ்ப்படிந்து நடப்பதுதான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொன்னால் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது? மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இவையெல்லாம் பெரிய அரசியல் கேள்வியாக எழுப்பக்கூடிய விவகாரமாக உள்ளது. அவ்வளவு சுலபமாக மத்திய அரசு சாய்ந்துவிடாது என்று கருதுகிறேன். " என அமைச்சர் துரை முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications