ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆகிவிட்டார்! டெல்லிக்கு போனதே 2 முறை தான்! துரைமுருகன் 'பளிச்'!
முதல்வர் ஸ்டாலினை ஆல் இந்தியா லீடர் எனக் கூறி துரைமுருகன் புகழாரம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தேசியத் தலைவராகிவிட்டார் என்றும் கருணாநிதிக்கு கூட இந்த வாய்ப்பு உடனே கிட்டவில்லை எனவும் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதே 2 முறை தான் என்றும் முதலமைச்சராகி 2 ஆண்டுகளுக்குள் அவர் தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார் எனவும் புகழாரம் சூட்டினார்.
கருணாநிதி முதலமைச்சராகிய பிறகு தேசியத் தலைவராக வருவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆனதாக துரைமுருகன் கூறியுள்ளார்.

மொழிப்போர்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் தாம்பரம் பகுதியில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், மொழிப்போர் பற்றி சில நிமிடங்கள் பேசிவிட்டு நடப்பு அரசியல் விவகாரம் பற்றி ஒரு பிடி பிடித்தார். குறிப்பாக ஆளுநர் ரவியை விமர்சிக்கும் வகையில் அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன.

53 ஆண்டுகால அனுபவம்
சட்டசபையில் ஆளுநர் ரவி மிஸ்யூஸ் செய்துவிட்டார் என்றும் அச்சிடப்பட்ட உரையில் இருக்கும் வரிகளை விட்டிருந்தால், சரி ஏதோ தவறுதலாக விட்டிருக்கிறார் என நினைத்திருப்போம், ஆனால் அவரோ இல்லாத வரிகளை எல்லாம் சேர்த்து படித்ததால் தான் ஒரு சிட்டிகை போட்டோம் எனவும் துரைமுருகன் பேசியிருக்கிறார். 53 ஆண்டுகாலம் சட்டசபை அனுபவம் தனக்கு இருப்பதாகவும் சட்டசபையின் ஒவ்வொரு கல்லும் தனக்கு பரிச்சயம் எனவும் துரைமுருகன் பேசியிருக்கிறார்.

ஆல் இந்தியா லீடர்
கருணாநிதி முதலமைச்சராகிய பிறகு 10 முதல் 15 ஆண்டுகள் கழித்து தான் ஆல் இந்தியா லீடர் ஆக முடிந்ததாகவும் ஆனால் முதல்வராகி இரண்டே ஆண்டுகளுக்குள் ஸ்டாலின் ஆல் இந்தியா லீடர் ஆகியிருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். இத்தனைக்கும் ஸ்டாலின் டெல்லிக்கே 2 முறை தான் சென்றிருப்பதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டார். தமிழக சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்த விவகாரம் தேசியளவில் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமர்ந்து பேசினார்
வழக்கமாக திமுக மேடைகளில் நின்று கொண்டு பேசும் அமைச்சர் துரைமுருகன் அண்மைக்காலமாக நாற்காலியில் அமர்ந்த படியே பேசி வருகிறார். நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாற்காலியில் அமர்ந்தவாறே பேசினார். 80 வயதை கடந்துவிட்டதால் துரைமுருகனுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications