மியான்மரில் சிக்கியிருந்த 20 தமிழர்கள் மீட்பு.. பயண செலவுகளை ஏற்ற தமிழக அரசு- அமைச்சர் மஸ்தான் தகவல்
சென்னை : மியான்மர் நாட்டில் சிக்கியிருந்த 20 தமிழர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தமிழகம் திரும்புவதற்கான பயணச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம், பல்வேறு வேலைகளுக்காக தாய்லாந்து சென்ற தமிழர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், மியான்மரில் சித்திரவதைக்கு உள்ளாகினர்.
தமிழக அரசின் வேண்டுகோளை அடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
முதல்முறையாக.. 50 வருடங்களுக்கு பிறகு 4 பேரை தூக்கிலிட்டது ராணுவ ஆட்சி.. மியான்மர் மக்கள் அதிர்ச்சி
மியான்மரில் ஏமாற்றப்பட்ட தமிழர்கள்
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மியான்மருக்கு ஐடி உள்ளிட்ட துறைகளுக்கு வேலைக்காக சென்ற இளைஞர்களை ஏமாற்றி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்த முயல்வதாகவும் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 300 பேரில் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு சித்ரவதை செய்வதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியானது.
ஸ்டாலின் எழுதிய கடிதம்
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மியான்மரின் மியவாடி என்ற பகுதியில் சிறை வைத்து இளைஞர்களை சட்டவிரோத செயலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறப்படுகிறது என்றும் ஹேக்கிங் உள்ளிட்ட சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, மேலும் அங்கே சிக்கியுள்ள தமிழர்களில் 17 பேர் அரசின் தொடர்பில் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
தமிழக அரசே ஏற்கும்
இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ள 20 தமிழர்களை மீட்டு வருவதற்கான உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை எடுத்த பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப அதற்கான டிக்கெட் உள்ளிட்ட செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு தகவல் தெரிவித்தது.
பாங்காக்கில் தங்கவைப்பு
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "மியான்மரில் சிக்கியுள்ள 20 தமிழர்கள் உட்பட பலர் பத்திரமாக மீட்கப்பட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடு இருப்பதால், 27-ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். தேதி உறுதியானதும், அவர்களுக்கான விமான டிக்கெட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.