“அக்சப்டட்”.. ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை! ஐபி கொடுத்த அப்டேட் - ஒரு கோடி பேருக்கு மட்டும்தானா?
சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அப்டேட் கொடுத்து உள்ளார். அவர் என்ன சொன்னார்? விரிவாக பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம், ரேசன் கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேசியதாவது, "செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்படும். அதன் மூலம் தகுதியான அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

அரசு விதித்து இருக்கும் விதிகளின் அடிப்படையில் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது வரை பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான எண்ணிக்கையை முடிவு செய்யாமல் தகுதியான அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது." என்றார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் கடந்த ஜூலை மாதம் என அறிவித்தது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாம் தொடங்கப்பட்டது. அந்த முகாம்களில் விண்ணப்பங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆகஸ்டு 4 ஆம் தேதி முதல் கட்ட முகாம் நிறைவு பெற்றது. அதன் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
2 ஆம் கட்ட முகாம் ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. 2 ஆம் கட்ட முகாமில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஆகஸ்டு 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாமை தமிழ்நாடு அரசு நடத்தியது. அதன் மூலமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன.
சரியான தகவல்களை விண்ணப்பங்களில் மக்கள் வழங்கி இருக்கிறார்களா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி ஆய்வுப் பணிகள் நடைபெற்று முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இதில் 63 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீக்கப்படலாம் என்ற தகவல் பரவிய நிலையில், தகுதியான அனைவருக்கும் கிடைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமியும் அதே தகவலை கூறி இருப்பது மக்களுக்கு ஆறுதல் அளித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications