எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு.. எங்களை சீண்டினால் பின்விளைவு பயங்கரமா இருக்கும்.. அமைச்சர் வார்னிங்
சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்தது கீழ்த்தரமான செயல். அதிமுகவினரை சீண்டினால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மாதவரத்தில் நடந்த மருத்துவ முகாமை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஜெயலலிதா உலகம் போற்றக்கூடிய தலைவராவார்.
தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பர். அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படுவதுதான் தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணம். அதிமுக தொண்டர்களும் அதைத்தான் நினைக்கிறார்கள். மாற்றுக்கட்சியினரும் அதைத்தான் கூறுகிறார்கள்.

மண்டபம்
இதனால்தான் அவருடைய இல்லத்தை நினைவு இல்லமாகவும் அவர் மறைந்த இடத்தில் நினைவு மண்டபமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். ஜெயலலிதாவின் வாரிசுகள் சட்டப்படி சந்திப்போம் என கூறியிருக்கிறார்கள். அதை அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

கீழ்த்தரம்
எம்ஜிஆர் சிலை மீது காவித் துண்டு அணிவித்த சம்பவத்திற்கு அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். வாக்கு வங்கிக்காக இந்த அரசியலை யார் முன்னெடுத்தாலும் அது கீழ்த்தரமானது. யார் செய்திருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள்.

ரஜினிகாந்த்
அதிமுகவினரையும் எம்ஜிஆர் தொண்டர்களையும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். ரஜினிகாந்த் இ பாஸ் இல்லாமல் சென்றது குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. அதில் தவறு இருந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியிருக்கிறார். 2ஆவது முறை செல்லும் போது அவர் இ பாஸ் வாங்கியுள்ளார். எனவே அதில் எதுவும் சொல்வதற்கு இல்லை.

இ பாஸ்
உதயநிதி ஸ்டாலின் இதுவரை வெளியூர் சென்றதற்கான இ பாஸை காட்டவில்லை. சட்டத்தை மதித்து சென்றால் நல்லது. சட்டத்தை மதிக்காமல் சென்றால் பிரச்சினைதான். தவறு செய்வதவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பட்ட அரசுதான் அதிமுக அரசு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications