எங்களை குறை சொல்லி நல்ல பெயர் வாங்கும் முயற்சியா? ‘ஓபிஎஸ் நோக்கம் எடுபடாது’ - அமைச்சர் பதிலடி!
சென்னை : முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டதாக, மக்களை திசை திருப்பும் உள்நோக்கத்துடன், ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார் எனக் குற்றம்சாட்டியுள்ளார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, இப்போது பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது மக்களை வஞ்சிக்கும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை சரியாகச் செயல்படுத்திவரும் தமிழக அரசை வேண்டுமென்றே குறை சொல்வதா என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஓபிஎஸ் நோக்கம் எடுபடாது
ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அளித்துள்ள பதில் அறிக்கையில், "தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டதாக, மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், தமிழ்நாடு முன்னாள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசை குறைகூறி, நல்ல பெயரை எடுக்க முயற்சிக்கும் அவருடைய நோக்கம் எடுபடாது. சமூகப் பாதுகாப்புத் திட்ட நடைமுறைகளை நன்கு அறிந்திருந்தும், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றும், தற்போது ஓய்வூதியம் பெறும் அனைத்துப் பயனாளிகளும் தொடர்ந்து ஓய்வூதியம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஓபிஎஸ் அமைச்சராக இருந்தபோது
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இறந்தவர்கள், இரண்டு ஓய்வூதியம் பெறுபவர்கள், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் போன்றவர்களைக் கண்டறிந்து, பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கிவருவது தொடர்ந்து நடைபெற்றுவரும் வழக்கமான நடைமுறை ஆகும். இந்த அரசை குறைகூறும் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சராக இருந்தபோது, கடந்த அஇஅதிமுக ஆட்சியில் 2014-2015ல் மட்டும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெற்றுவந்த 4.38 லட்சம் பயனாளிகள் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

7 ஆண்டுகளில், 15.20 லட்சம் பேர் நீக்கம்
மேலும், 2015-16 முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை, 10.82 லட்சம் பயனாளிகள் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் அஇஅதிமுக ஆட்சியின் 7 ஆண்டுகளில், 15.20 லட்சம் நபர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட போது, குறைகள் ஏதும் சொல்லாமல் இருந்த ஓ. பன்னீர்செல்வம் தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் இறந்தவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது சரியென்று சொல்லுகிறாரா? இந்த அரசின் செயல்பாடுகளில் குறை சொல்ல எதுவும் இல்லாத காரணத்தினால், இல்லாத ஒன்றை குறையாக தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் உத்தரவு
இன்று தமிழ்நாட்டில், "திராவிட மாடல்" ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தகுதியுள்ள அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென ஆணையிட்டுள்ளார். இதன்படி, கடந்த ஆண்டில் மட்டுமே 4 லட்சத்து 92 ஆயிரம் நபர்களுக்கு புதியதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் 2.57 லட்சம் நபர்களுக்கு மட்டுமே புதியதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மேலும், அதிமுக ஆட்சியில், 2020-2021ஆம் ஆண்டில், ஓய்வூதியம் வழங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.4,306 கோடியினை உயர்த்தி 2022-23ஆம் ஆண்டில் ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் உள்நோக்கம்
இந்த புள்ளிவிவரங்களே போதும், ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என தெரியவரும். இருப்பினும், பொதுமக்களின் தகவலுக்காக பின்வரும் சரியான விவரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். வருவாய்த்துறையின் வழக்கமான கள ஆய்வுகளின்போது, பல்வேறு சமூக நல பாதுகாப்பு திட்டங்களின்கீழ், ஓய்வூதியம் / உதவித்தொகை பெற்றுவருபவர்களில், இறந்தவர்கள், இரண்டு ஓய்வூதியங்கள் பெறுபவர்கள், அரசு பணியில் இருந்துகொண்டு உதவித்தொகை பெறுபவர்கள், அரசு பணியில் ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியத் தொகையும் முதியோர் ஓய்வூதியமும் பெறுபவர்கள், வறுமைக்கோட்டிற்குமேல் உள்ளவர்கள் ஆகியோர்களை கண்டறிந்து நீக்கிவிட்டு, தகுதியானவர்களை இத்திட்டத்தின்கீழ் சேர்க்கும் பணி, தொடர்ச்சியாக நடைபெறும் பணியாகும்.

இதுதான் சமூக பொருளாதார நீதி
இதனால் தகுதி வாய்ந்த நபர்கள் விடுதலின்றி பயன்பெறுவது என்பது உறுதி செய்யப்படுகிறது. மக்களின் வரிப்பணம் தேவையான ஏழை எளிய மக்களுக்காக செலவு செய்யப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. இதுதான் சமூக பொருளாதார நீதியும் ஆகும். சமூகப் பாதுகாப்புத் திட்ட விதிகளின்படி, தகுதியற்ற நபர்கள் மட்டுமே கள ஆய்வு பணியின் முடிவுகளின்படி நீக்கப்பட்டுள்ளனர். மேலும், தகுதியானவர் எவருக்கும் இல்லையென சொல்லாமல் வழங்கும் நமது தமிழ்நாடு முதலமைச்சர், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர்களும் தாங்கள் தவறாக நீக்கப்பட்டதாக கருதினால், அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யவும், அதனை, மறு கள ஆய்வு செய்து விதிகளின்படி தகுதியிருப்பின், அவர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கிடவும் அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கான வழிமுறைகளும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சி
அனைத்துத் துறையின் வளர்ச்சி, அனைத்து வகை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற "திராவிட மாடல் ஆட்சி" சிறப்பாக நடந்துவரும் தமிழ்நாட்டில் 'சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, அனைத்து தகுதி வாய்ந்த நபர்களும் விடுதலின்றி பயன்பெறுவதை இந்த அரசு உறுதி செய்யும்' என்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications