திமுக-பாஜக கூட்டணி வைக்கும் என சிவி சண்முகம் 'எத்தனை மணிக்கு பேசினாரு'.. அமைச்சர் கே.என்.நேரு பொளேர்
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என அதிமுக எம்பி சிவி சண்முகம் பேசுவது எல்லாம் அர்த்தமே இல்லாதது என்று திமுகவின் முதன்மை செயலாளரும் மூத்த அமைச்சருமான கே.என்.நேரு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சிவி சண்முகத்தை கிண்டலடிக்கும் வகையில் அவர் எத்தனை மணிக்கு அப்படி பேசினாரு என தனக்கே உரிய பாணியில் கேள்வி எழுப்பினார் அமைச்சர் கே.என்.நேரு.
தந்தி டிவியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பதாவது: அமைச்சரவையில் உதயநிதி இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இதை நாங்கள் எதிர்பார்த்துதான் இருந்தோம். முதலமைச்சர் ஒருவருக்கு தமக்கு கீழே பணியாற்றுகிற அமைச்சர்களை நியமிப்பது அவருடைய விருப்பம். ஏற்கனவே 34 பேரை நியமித்திருக்கிறார். தற்போது உதயநிதி தேவை என நினைக்கிறார்.. அதனால் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

உதயநிதிக்கு தாமதமாகவே அமைச்சர் பதவி
உதயநிதிக்கு ஒன்றரை ஆண்டுகளிலேயே அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை இது தாமதம்தான். ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே உதயநிதியை அமைச்சராக்கி இருக்க வேண்டும். 2 அல்லது 3 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கக் கூடியவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆக வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. உதயநிதிக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரப்படவும் இல்லை. 234 எம்.எல்.ஏக்களில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் 2 பேர்தான் எம்.எல்.ஏக்க்கள். இது எப்படி குடும்ப அரசியல் என சொல்ல முடியும்? அவங்களால்தான் நாங்க.. அதனால் நாங்க அவர்களை முழுமையாக ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறோம்.

பாஜக பற்றி பேசியது ஏன்?
திமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக வளருகிறது என அமைச்சர் துரைமுருகன் பேசினார். திமுகவினரை உற்சாகப்படுத்தவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் திமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் பாஜக அசுரத்தனமாக வளருகிறது என பேசினார். அதற்காக பாஜகவை கண்டு திமுக அச்சப்படுகிறது என்பது அர்த்தம் அல்ல.

திமுகவுக்குதான் சாதகம்
தமிழகத்தில் அதிமுக பிரிந்து கிடப்பதை பயன்படுத்திக் கொண்டு இங்கே நுழைய வேண்டும் என நினைக்கிறது பாஜக. இதனை அடிப்படையாக வைத்து திமுகவினரை சமாதானப்படுத்த, உற்சாகப்படுத்தும் வகையில் நாங்கள் கூட்டங்களில் பேசுகிறோம். அதற்கு எல்லாம் உள் அர்த்தம் பார்க்கக் கூடாது. ஆனால் அதிமுக பிளவுபட்டிருந்தால் திமுகவுக்கு சாதகம் என்பதுதான் யதார்த்தம்.

எத்தனை மணிக்கு பேசுனாரு சிவி சண்முகம்?
திமுக-பாஜக கூட்டணி குறித்து சிவி சண்முகம் பேசியிருக்கிறார். அவர் எத்தனை மணிக்கு பேசினாரு? என பார்க்க வேண்டும். எப்போதும் பேட்டி கொடுக்கும் போது ஆக்ரோஷமாக பேட்டி தரக் கூடியவர் சிவி சண்முகம். சில மாதங்கள் அதைப் பற்றி எல்லாம் பேசாமல் அமைதியாகிவிடுவார். அதனால் அவர் பேசுவது எல்லாம் அர்த்தமே இல்லாதது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.












Click it and Unblock the Notifications