தேடி வந்த அழைப்பு.. புற்றுநோய் சிகிச்சைக்கான ஆய்வு.. 5 நாட்கள் ஜப்பான் பயணிக்கும் மா.சுப்பிரமணியன்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாட்கள் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை: புற்றுநோய் சிகிச்சைக்காக கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழு 5 நாட்கள் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தின் போது ஜப்பான் நாட்டின் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் நாட்டிற்கு ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் கூறுகையில், புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய முன்னோடி நாடாக ஜப்பான் நாடு உள்ளது.
இதனால் ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை குறித்து நேரடியாக சென்று சுகாதாரத் துறையினருடன் ஆய்வு செய்ய உள்ளோம். ஜப்பான் கூட்டுறவு முகமை, புற்றுநோய் சிகிச்சை குறித்து அறிய எங்களை அழைத்துள்ளது.

ஜப்பான் செல்லும் மா.சுப்பிரமணியன்
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றிக்கு நிதி உதவி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15வது நிதி ஆணையத்தின் கீழ் ரூ.800 கோடி அளவிற்கு திட்ட மதிப்புகள் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று நிதி அமைச்சரை சந்தித்தபோது, அவர் ரூ.86 கோடி வழங்கினார்.

மதுரை எய்ம்ஸ்
மதுரை, கீழ்பாக்கம், கோவை உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்களை கட்டுவதற்கும், ஜப்பான் கூட்டுறவு முகமையின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு கடன் பெறப்பட்டுள்ளது. 1,387 கோடி டைக்கா அமைப்பிடம் கடன் வாங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில், மதுரை எய்ம்ஸ் மட்டும் ஜப்பான் கூட்டுறவு நிதியில் தொடங்கப்பட்டது.

தவறாக பேசுகிறார்கள்
தமிழ்நாடு இன்று கல்வி, மருத்துவம், தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் முதன்மையாக விளங்க முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்கு முக்கியமானது. அதனால் அவரின் நினைவாக பேனா சின்னத்தை கடலில் வைப்பதில் தவறில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்றாகவே கருதுகிறேன். மீனவ மக்கள் யாரும் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடலில் மண் மற்றும் கற்களை நிரப்பி பேனா சின்னம் அமைக்கப்படவுள்ளது. ஆனால் கடலையே ஆக்கிரமிப்பது போல தவறான செய்தியை பேசுகிறார்கள்.

அரசியல் காரணங்கள்
ஒரு நினைவு சின்னத்தை அமைப்பதன் மூலம், எதிர்ப்பவர்களின் வன்மத்தை காட்டுகிறது. மீனவர்களுக்காக கடலில் தூண்டில் வளைவு மற்றும் சிறு துறைமுகங்கள் அமைக்கும் போது கடலில் ஆக்கிரமித்து தான் கட்டுகிறோம். அப்போதெல்லாம் கடல் பாதிக்கப்பட்டுள்ளது என்று எந்த மீனவரும் குறை சொல்லவில்லை. ஆனால் இந்த சின்னம் அமைப்பதற்காக, அரசியல் காரணங்களுக்காகவே அதை எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications