செம்பரம்பாக்கம் திறப்பால் இந்த பகுதிகள் என்னவாகும்? உடனடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் மா.சு
சென்னை: வெள்ள காலங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றான சைதாப்பேட்டையில் மருத்துவத் துறை அமைச்சரும் சைதாப்பேட்டை எம்எல்ஏ-வுமான மா சுப்பிரமணியன் இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பருவமழை காரணமாகவும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவை படுவேகமாக நிரம்பி வருகிறது.

சென்னை ரெட் அலர்ட்
குறிப்பாகச் சென்னைக்கு மழை அபாயம் காரணமாக ரெட் அலர்டு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை தொடங்கி கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் தியாகராய நகர் துரைசாமி சுரங்கப்பாதை, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு- பூந்தமல்லியை சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன.

சுற்றியுள்ள ஏரிகள்
இப்படித் தொடர்ந்து பெய்து வரும் மழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள 129 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 75 ஏரிகளும் முழு கொள்ளவை எட்டியுள்ளன. சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் நீர்மட்டம் 19.30 அடியாக உயர்ந்துள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி என்பதால் தற்போது ஏரியில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
அதேபோல ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் இன்று மதியம் திறக்கப்பட்டது. முதலில் 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1000 அடி நீர் ஏரியில் இருந்து திறக்கப்படுவதால் ஏரியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

களத்தில் இறங்கிய அமைச்சர்
கடந்த 2015ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் செம்பரம்பாக்கம் திடீரென திறந்துவிடப்பட்டதால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது சென்னை தான். அதிலும் குறிப்பாக ஆற்றின் கரையில் அமைந்துள்ள சைதாப்பேட்டை, ஈக்காடுதாங்கல் போன்ற பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் மருத்துவத் துறை அமைச்சரும் சைதாப்பேட்டை சட்டசபை உறுப்பினருமான மா சுப்பிரமணியன் இன்று காலை முதலே சைதாப்பேட்டையில் பல்வேறு பகுகிளில் ஆய்வு செய்தார்.

அமைச்சர் மா. சு ஆய்வு
கரையோரம் வசிக்கும் மக்களை தங்க வைக்கும் இடங்களையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், 2015ஆம் ஆண்டை போல இல்லாமல் தற்போது ஏரிகளில் இருந்து உபரிநீர் படிப்படியாகவே திறந்துவிடப்படுவதாகவும் இதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2015 வெள்ளத்திற்குப் பிறகு ஆற்றின் கரையோரம் சுவர் ஏற்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. கரையோரம் ஏற்படுத்தப்பட்ட இந்த சுவர் வெள்ள நீர் புகுவதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சைதாப்பேட்டையில் கரையோரம் வசித்து வரும் திடீர் நகர் உட்படப் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications