முட்டி 6 துண்டாகி நான் கவலைக்கிடம்னு செய்தி போட்டாங்க.. அப்பறம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகல
சென்னை: விபத்தில் சிக்கி என் மூட்டு 6ஆக உடைந்ததை அடுத்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கவலைக்கிடம்னு செய்திகள் வந்தன. ஆனால் இன்று நான் எப்படியிருக்கிறேன் பாருங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகலப்பாக பேசினார்.
முத்தமிழறிஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி GUINESS சாதனை ஓட்டம் "கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் - 2023 ( 4th edition)" முன்பதிவை கழக இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: நான் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக மாரத்தான் ஓடவில்லை. என்னுள் இருந்த சர்க்கரை நோயை விரட்டுவதற்காக ஓடினேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சர்க்கரை நோய் வந்தது.

வாழ்க்கை இருண்டு விட்டது
அப்போது வாழ்க்கையே இருண்டு விட்டது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க நடைபயிற்சி, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவை இருந்தால் போதும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இவை எல்லாவற்றையும் விட சுகர் வந்துவிட்டால் நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள்தான் உயிரோடு இருப்பீங்க என சொன்ன "நல்ல" நண்பர்களும் உண்டு.

சீராக நடக்க ஆரம்பித்தேன்
1995, 96 ஆம் ஆண்டுகளில் சீராக நடக்க ஆரம்பித்தேன். ஒரு விபத்தில் வலது கால் மூட்டு 6 துண்டுகளாக உடைந்துவிட்டது. மண்டை பிளந்து மா சுப்பிரமணியன் கவலைக்கிடம் என எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வந்தது. இதை அறிந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், மதுரையிலிருந்து வந்து என்னை காவேரி மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தார்.

வாக்கரில் நடந்தேன்
அதன் பின்னர் மெதுவாக வாக்கரை வைத்து நடந்து, பிறகு தனியாக நடந்து, தற்போது 139 மாரத்தான்களில் ஓடியுள்ளேன். அதில் வெளிநாட்டில் லண்டன், கத்தார், இத்தாலி, நார்வே, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் 12 மாரத்தான் ஓடியுள்ளேன். இந்தியா முழுக்க 24 மாநிலங்களில் ஓடியிருக்கிறேன். என்னுடைய நோக்கம் , இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களிலும் ஓடி, 21 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் அனைத்து மாநிலங்களிலும் கால் தடம் பதித்தவன் என்ற நிலையை அடைய வேண்டும்.

சாதனைக்காக அல்ல
இது சாதனை படைப்பதற்காக அல்ல. ஒவ்வொரு முறையும் மாரத்தான் ஓடி முடித்துவிட்டு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இப்படி செய்கிறேன். ஓடி முடித்தவுடன் அதை என் சமூகவலைதளத்தில் அதை பதிவு செய்து வருகிறேன். ஊட்டியில் அல்ட்ரா மாரத்தான் சங்கம் இருக்கிறது. நாளை காலை (இன்று) 30 கி.மீ. மாரத்தான் நடத்துகிறார்கள்.

140ஆவது மாரத்தான் போட்டி
இதில் நான் கலந்து கொண்டு 140 ஆவது மாரத்தானில் ஓடுகிறேன். மலை பகுதிகளில் ஓடுகிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் 63 வயது கிழவன் என்று கூட என்னை சொல்லலாம். என்னாலேயே முடியும் போது உங்களால் ஏன் முடியாது. நம்முடைய பிரசிடென்சி பிரின்சிபலிடம் கேட்டேன். எவ்வளவு பேர் கல்லூரியில் மாரத்தான் ஓடுகிறார்கள் என கேட்டேன்.

தென் மாவட்ட திமுக ஏற்கும்
அதற்கு அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஓட வைக்கிறோம் என சொன்னார். இந்த கல்லூரி என்பது வரலாற்று சிறப்புமிக்க கல்லூரி. 1000 பேரோ 2000 பேரோ இவ்வளவு பேருக்கான பதிவு கட்டணத்தை தென் சென்னை மாவட்ட திமுக பொறுப்பேற்றுக் கொள்ளும் என சொல்லிக் கொள்கிறோம். நான் ஓடினாலும் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டமைப்புக்கு செல்கிறது.

முதல்வரின் பிறந்தநாள்
முதல்வரின் பிறந்தநாள் விழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு 2, 3 கோரிக்கைகளை முன் வைத்தனர். அவை அந்த மேடையிலேயே நிறைவேற்றப்பட்டது. அதில் ஒரு திருநங்கை, நாங்கள் தாய்லாந்தில் நடைபெறும் உலக அழகி போட்டியில் பங்கேற்க வேண்டும், அதற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கேட்டார். நான் உடனே முதல்வரிடம் கூறி ரூ 8 லட்சத்தை பெற்றுத் தந்தேன். அவரும் உலகளவில் இன்று அழகியாக பட்டம் பெற்று வந்திருக்கிறார்.

திருநங்கை
இந்த மாரத்தானில் திருநங்கைகளும் ஆர்வம் காட்ட வேண்டும். இதன் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள திருநங்கைகள் உடற்பயிற்சி மீது ஆர்வம் காட்டுவார்கள். மாரத்தானில் ஓட திருநங்கைகளுக்கு ரூ 100 கட்டணம் என போட்டிருந்தோம். அவர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். திருநங்கைகள் 1000 பேரோ 2000 பேரோ எத்தனை பேர் கலந்து கொண்டாலும் அவர்களுக்கான ரூ 100 கட்டணத்தையும் தெற்கு மாவட்ட திமுக ஏற்கும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications