ஆய்வு... ஆலோசனை... பயணம்... அவரும் பாராட்ட வேண்டும்... ஓடிக்கொண்டிருக்கும் அமைச்சர்..!
சென்னை: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவிருப்பதால் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஓய்வின்றி துறை சார்ந்த பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
கட்சிப் பணிகளை அப்படியே ஓரங்கட்டி வைத்துள்ள அவர், வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் நாளொன்றுக்கு பல மணி நேரம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு முதல்முறையாக நடைபெறவிருப்பதால் அந்த துறையின் அமைச்சர் என்கிற முறையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முத்திரை பதிக்க வேண்டும் என நினைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாராட்டை பெறுவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்துறைக்கு நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடும் பாமக நிறுவனர் ராமதாசும் தனது வேளாண் பட்ஜெட் உரையை கேட்டு பாராட்டு வேண்டும் என எண்ணுகிறார். திமுக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை பாமக பாராட்டினால் அது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படும்.
இதனால் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பார்த்து பார்த்து இணைத்து வருகிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். விவசாயிகள் மத்தியில் இந்த பட்ஜெட் பெரியளவில் பேசப்பட வேண்டும் என நினைக்கும் அவர், இதற்கான அதிகாரிகளை டிரில் எடுத்து வருகிறார்.
வேளாண் நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிசியாக இருப்பதால், கட்சிப்பணிகளில் அவரது மகன் கதிரவன் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் தானும் டெல்டா உள்ளிட்ட இன்னும் சில பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை அழைத்து அவர்களின் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறார். வேளாண் உழவு இயந்திரங்கள் வாங்குவதற்கு கடனுதவி, உள்ளிட்ட இன்னும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.