இனி வரும் காலங்களில் சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்காது.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை: இனி வரும் காலங்களில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை உறுதித்தன்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் உள்ள நீர் தேங்க கூடிய பாலங்களை சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட உள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான கோடிக்கு திட்டங்களை தீட்டி சென்னை, வடிகால் அமைப்பினை சீரழித்து சென்றுள்ளனர். அதனை சரி செய்வதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களுக்கு மற்றும் வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும்.
ஆனால், வடிகால் அமைப்பு எங்கு போய் சேர வேண்டும் என்று வடிவமைக்கவில்லை. தவறாக உள்ள வடிகால் இணைப்புகள் மாநகராட்சி ஆணையர் சார்பில் கணக்கெடுப்பு நடைபெற்றும் வருகிறது. இனிவரும் காலங்களில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும்.
நிதிச்சுமை இருந்தாலும் சென்னையை ஒளிரச் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். மக்களை காப்பாற்றும் பணியில் நிச்சயம் ஈடுபடுவோம் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து இருக்கிறது விரைவில் அப்பகுதியில் வெள்ளநீர் அகற்றப்படும். அப்பகுதியிலுள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்களில் யார் கோவிஷீல்டு முதல் தடுப்பூசி எடுத்து இருக்கிறார்களோ அவர்கள் 80 நாள் கழித்தும், கோவாக்சின் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 30 நாள் கழித்தும் 2ம் தவணை தடுப்பூசியைப் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
முதலாவது டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டவர்கள் உரிய காலத்திற்குள் 2வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது கூடியவர்கள் வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற இருக்கிறது அவர்களது ஆதார் கார்டு கொடுத்து வாக்காளர் தங்களை வாக்காளர்களாக இணைத்துக்கொள்ளலாம் என ககன்தீப் சிங்பேடி தெரிவித்தார்.