அரசியல் பற்றி பேச வேண்டாமே ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நாகரீகமாக நடந்துகொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி!
சென்னை: தன்னை பற்றி பேசவில்லை என்றால் சிலருக்கு தூக்கம் வராது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சூசகமாக விமர்சித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
கர்நாடக மாநிலத்தில் ஒரே ஆண்டில் மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் இது குறித்து அண்ணாமலையிடம் கேள்விகள் கேட்கலாமே எனவும் செய்தியாளர்களை கேட்டுக் கொண்டார்.
இதனிடையே அரசியல் தொடர்பான கேள்விகளை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மின் வாரிய நடவடிக்கைகள் பற்றி மட்டும் கேள்விகள் கேட்குமாறு அறிவுத்தினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;

மழை அதிகம்
வரக்கூடிய நாட்களில் மழை அதிகமாக இருந்தாலும் கூட எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளேன். ஏற்கனவே, ஜுன் மாதம் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பராமரிப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 44,000 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இப்படி தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மின்னகம்
மின் விநியோகத்தை பொறுத்தவரைக்கும் ஊடக நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, மழையால் மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் மின்னகத்தை தொடர்பு கொண்டு எந்த இடங்களில் பாதிப்பு என்று புகார் தெரிவிக்க வேண்டும். அந்த புகாரின் அடிப்படையில் விரைவாக விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த மழையினால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எங்கேயும் பாதிப்பு இல்லை.

மக்கள் பாராட்டு
சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 16 உயர் அழுத்த மின்மாற்றிகளின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கனமழை பெய்தும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டதை பொதுமக்கள் மனதார பாராட்டியுள்ளனர். பத்திரிக்கையாளர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர். மழைக்காலங்களில் அனைத்து மின் நுகர்வோர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

அரசியல் கேள்விகள்
இதனிடையே தன்னைப் பற்றியும், மின் வாரியத்தையும் பற்றியும் பேசவில்லை என்றால் சிலருக்கு தூக்கம் வராது என அண்ணாமலையை சூசகமாக சாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி அரசியல் தொடர்பான கேள்விகளை தயவுகூர்ந்து தவிர்க்குமாறு செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications