"ஏன் திடீர் திடீர்னு கரண்ட் கட் ஆகுது".. ஸ்டாலின் போட்ட உத்தரவு.. அதிரடியில் குதித்த செந்தில் பாலாஜி
மின்தடை குறித்து செந்தில்பாலாஜி பேட்டி தந்துள்ளார்
சென்னை: மின்தடையே இருக்கக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.. அதனால், முதல்வரின் அறிவுறுத்தலின்படி மின்வாரியம் செயல்படுகிறது.. இனி மின்தடை குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
Recommended Video
இந்தமுறை ஒரு குறிக்கோளுடன் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார்.. பதவியேற்றபோது, அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்..
அப்போது, மக்களுக்கான அரசாக இது இருக்க வேண்டும், அதற்கேற்றபடி அமைச்சர்கள் சுயவிருப்பின்றி பணியாற்ற வேண்டும்.. எந்த துறையிலாவது தவறு நடந்தால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்" என்று கண்டிப்புடனும் அறிவுறுத்தியிருந்தார்.
கண்டிப்பு
அதற்கேற்றபடி, அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.. ஒருங்கிணைந்து கொரோனாவை விரட்டுவோம் என்ற முதல்வரின் முழக்கத்திற்கேற்ப தங்களின் பங்களிப்பை முழுமையாக தந்து வருகின்றனர்.. அதேசமயம், துறைரீதியான அறிவிப்புகளையும் அந்தந்த துறை அமைச்சர்கள் வெளியிட்டு உற்று நோக்க வைத்தும் வருகின்றனர்.
சிக்கல்கள்
அதன்படி, செந்தில்பாலாஜி, மின்துறை சம்பந்தப்பட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.. தற்போது கொரோனா முழுமையாக குறையாததாலும், தொடர்ந்து லாக்டவுன் இருப்பதாலும், மின்சாரம், மின்கட்டணம் குறித்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.. மேலும், தமிழகத்தில் மின்தடை ஆங்காங்கே இருந்து வருகிறது. இதற்கு ஏற்கனவே செந்தில்பாலாஜி ஒருமுறை பதிலளித்திருந்தார்..
பொதுமுடக்கம்
"பொதுமுடக்கம் முடியும் வரை மின்தடைக்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.. இருப்பினும் மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது... பொதுமுடக்கம் தளர்வு செய்யப்பட்ட பிறகு பராமரிப்பு பணிகள் தொய்வின்றி நடக்கும்" என்றார்.
மின்தடை?
இந்நிலையில் மீண்டும் சில அறிவிப்புகளை செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.. "மின் கட்டணங்களை நுகர்வோரே கணக்கிட்டு செலுத்தலாம்.. மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி நீட்டிக்கப்படுகிறது. மின்தடை ஏற்படக்கூடாது என்ற முதல்வர் சொல்லி உள்ளதால், அதற்கேற்றபடியே மின்வாரியம் செயல்படுகிறது.. . எந்த இடங்களில் மின்தடை ஏற்பட்டது என தெரிவித்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.. எந்தெந்த இடங்களில் எப்போது மின்தடை ஏற்பட்டது என்ற முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.. அப்படி தெரிவித்தால், துறை ரீதியாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற அதிரடியாக அறிவித்துள்ளார்.