"பச்சோந்தி!" நீட் விலக்கு விவகாரம்.. எடப்பாடி பழனிசாமியை தாறுமாறாக விமர்சித்த உதயநிதி! பரபர பேச்சு
சென்னை: நீட் விலக்கை வலியுறுத்தி நடந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி, அதிமுக மற்றும் பாஜகவை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.

திமுக சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தி "நீட் விலக்கு நம் இலக்கு" என்ற தலைப்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி, நீட் விலக்கு குறித்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இங்கிருந்த அதிமுக பாசிச பாஜக தயவால் தான் ஆட்சியைத் தக்க வைத்து இருந்தார்கள்.இது அனைவருக்கும் தெரியும். அப்போது அந்த அதிமுக அரசு தான் மாணவர்கள் மீது நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்தது.
கடும் தாக்கு: எடப்பாடி பழனிசாமியின் அடிமைக் கூட்டம் கல்வி உரிமையை மோடி- அமித் ஷா ஆகியோரிடம் அடகு வைத்துவிட்டது. தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை அனுமதித்தனர். நாம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று சொன்னோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதை வெளிப்படையாகச் சொல்லியே மக்களைச் சந்திக்கிறோம். ஆனால், நீட் திணிக்கப்பட்ட போது அதிமுக என்ன சொன்னது. மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டும் சொல்லவிட்டது. வேறு வழியில்லை என்றுதானே சொன்னார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நீட் தேர்வுக்கு எதிராகவே உள்ளனர். இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். ஆனால் சுயநலத்திற்காக அவர் கடந்த ஆட்சியில் செயல்பட்டார். அதிமுக அரசின் தீர்மானத்தை அவரே நீர்த்துப் போகச் செய்தார். அதிமுகவின் சுயநலத்தால் தான் தங்கை அனிதா தொடங்கி, குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை இதுவரை நம் வீட்டுப் பிள்ளைகள் 22 பேரை நாம் இழந்துள்ளோம்.
தொடர் போராட்டம்: நீட் திணிக்கப்பட்ட நாளில் இருந்தே, நாம் அதை நீக்கப் போராடி வருகிறோம். ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தினோம். திமுக அரசு அமைந்ததும் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் ஆரம்பித்தோம். நீட் தொடர்பாக ஆய்வு செய்து மாணவர்களின் நலன் காக்கப் பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற 'தமிழ்நாடு மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம்2021' என்ற சட்ட மின்வடிவை ஒருமனதாக அனுப்பினோம். இந்த தீர்மானம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது. நான் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசும் போது கூட நீட் விலக்கு குறித்தே பேசினேன்.

எடப்பாடி பழனிசாமி: கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட அனைவரும் நீட் விலக்கிற்காகப் போராடுவோம் என்றே சொன்னேன்.. நீட் விலக்கு கிடைத்தால் அதற்கான பாராட்டைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவர் போராட வரவில்லை. தங்கள் மீது இருக்கும் வழக்குகளைப் பார்த்து அவர் பயப்படுகிறார். வழக்குகள் இருப்பதால் அவர்கள் நிச்சயம் நீட் விலக்கு போராட்டத்திற்கு வரவே மாட்டார்கள்.
அவர்கள் நிலைமைக்கு ஏற்ப மாற்றி மாற்றிப் பேசும் பச்சோந்திகள். அவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பயனில்லை. நம் மாணவர்களின் நலனுக்கு நாம் தான் போராட வேண்டும். இப்போது கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.. இது மாநிலம் முழுக்க நடந்து வருகிறது. விரைவில் நீட் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications