தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைப்பா? ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் மறுப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் மட்டும் 234 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 4,406 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில்தான் 61 கொரோனா பரிசோதனை மையங்கள் மிக அதிகமாக உள்ளன. கொரோனா தொடர்பான அறிகுறி இருந்தாலே உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை. இதுவரை மொத்தம் 3,22,508 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. ஆகையால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுவதில் உண்மை எதுவும் இல்லை.
இதேபோல் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில்தான் உயிரிழப்பு விகிதம் மிக மிக குறைவு. மத்திய அரசு அதிகாரிகளும் கூட தமிழகத்தை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் என்பது வெறும் 0.68 % ஆகத்தான் உள்ளது. அதேநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 37.46 ஆக உள்ளது. இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் பட தேவை இல்லை. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications