மீண்டும் களம் குதிக்கப் போகும் அழகிரி.. தனிக் கட்சி தொடங்குவாரா.. தொடங்கினால் டெபாசிட் மிஞ்சுமா?!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் தாமும் இருக்கிறேன் என மவுனம் கலைத்திருக்கிறார் மு.க. அழகிரி. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சி கனவை தகர்த்துவிடுவாரோ மு.க. அழகிரி என அச்சத்தில் இருக்கிறது திமுக.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் எப்படியாவது நுழைந்து தாமும் ஒரு அதிகார மையமாக வேண்டும் என நினைத்தார் மு.க. அழகிரி. ஆனால் திமுக தரப்பில் எந்த ஒரு பிடிமானமும் கொடுக்கவில்லை.
இதனால் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் திடீரென மவுனம் காத்தனர். ஒருகட்டத்தில் அழகிரி பாஜகவுக்கு போகிறார், ரஜினி கட்சிக்குப் போகிறார் என செய்திகளும் வந்தன. ஆனால் நான் கருணாநிதியின் மகன்; பாஜகவுக்கு எல்லாம் வரவே முடியாது என அழகிரி திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ரஜினி ப்ளஸ் அழகிரி
பின்னர் அழகிரியையும் ரஜினியையும் மையமாக வைத்து செய்திகள் வலம் வந்தன. ரஜினிகாந்த் கட்சியின் முதல்வர் வேட்பாளரே மு.க.அழகிரிதான் எனவும் செய்திகள் அடிபட்டன. ஆனாலும் அழகிரிதரப்பில் இருந்து மவுனமே பதிலாக இருந்து வந்தது.
மவுனம் கலைத்த அழகிரி
இந்த நிலையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்து தனது மவுனத்தைக் கலைத்தார் மு.க. அழகிரி. அதே உக்கிரத்துடன் திமுக மீதான கோபத்தை கொட்டியிருக்கிறார். திமுகவில் உட்கட்சி பூசல் இருக்கிறது என சுட்டிக்காட்டிய கையோடு தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசிப்போம் எனவும் கூறியிருக்கிறார்.
உற்சாக ஆதரவாளர்கள்
இப்பேட்டி மூலம் அரசியல் களத்தில் நானும் இருக்கிறேன்; தேர்தல் கோதாவில் நானும் குதித்துவிட்டேன் என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அழகிரி. இது மு.க. அழகிரியின் ஆதரவாளர்களை மட்டும் அல்ல திமுகவில் அதிருப்தியில் இருக்கும் பலரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது என்பது மிகையும் அல்ல.
அழகிரி கட்சி பெயர் என்ன?
அழகிரி தொடங்கப் போகும் கட்சியின் பெயர் கலைஞர் திமுகவா, கருணாநிதி திமுகவா, அண்ணா கலைஞர் திமுகவா? என பட்டிமன்றங்கள் இப்போதே நடக்கத் தொடங்கிவிட்டன. வலிமையான கூட்டணி அமைத்திருக்கிறோம்; ஆட்சி எப்படியும் நம் வசமாகும் என கனவில் இருக்கும் திமுகவுக்கு இது பெரும் உளைச்சலை கொடுத்திருக்கிறது.
திக் திக் திமுக
பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளின் வெற்றியை பறித்ததில் எல்ஜேபி, மஜ்லிஸ் கட்சிகள் பங்கு வகித்தன. அதேபோல் திமுகவின் வெற்றியில் அமமுக, நாம் தமிழர், மநீம சடுகுடு விளையாட வாய்ப்பிருக்கிறது என்கிற பேச்சுகள் இருக்கின்றன. இந்த நிலையில் மு.க.அழகிரி தன் பங்குக்கு ஆட்டத்தை ஆரம்பித்தால் என்னவாகுமோ நிலவரம்? என்பதுதான் திமுகவினரின் அச்சம்.
டெபாசிட் கிடைக்குமா?
அதேநேரத்தில் மு.க. அழகிரி பரபரப்பாக பேசப்பட்டபோதே சென்னையில் நடத்திய பேரணிக்கு வந்தவர்களை விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருந்தது. எனவே இவர் தனிக் கட்சி ஆரம்பித்தால் மதுரையில் எந்தத் தொகுதியிலாவது டெபாசிட் வாங்கினால் அதுவே உலக அதிசயம்தான்.. எனவே இவரால் திமுகவுக்கு எந்த அளவுக்கு "விரிசலை" ஏற்படுத்த முடியும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.