Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறைச்சாலை முதல் அரியாசனம் வரை.. நிழல்போல நெகிழ்ச்சி அன்பு.. ஸ்டாலின்-துர்கா 46வது திருமண நாள் இன்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தளபதியும் நானும், என்ற தலைப்பில் வார இதழில் தொடராக எழுதியிருந்தேன், அதை இப்போது புத்தக வடிவில் பார்க்கும்போது தலை பிரசவம் முடிந்த தாய் குழந்தையை கையில் வாங்குவதை போல பரவசமாக இருக்கிறது.." என்று தளுதளுத்த குரலில் பேசிய துர்காவதி அம்மையாருக்கும், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கும் திருமணமாகி 46வது ஆண்டு விழாவில் இன்று காலடி எடுத்து வைக்கிறார்கள்.

உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட துர்கா ஸ்டாலின் எழுதிய "அவரும் நானும்" என்ற புத்தக வெளியீட்டு விழாவில்தான் ஸ்டாலின் அவ்வாறு பேசியிருந்தார்.

தனது கணவரே வாழ்க்கை, என்று எண்ணம் கொண்ட துர்கா ஸ்டாலினுக்கு, தனது வாழ்நாள் அனுபவங்களை புத்தகமாக வடித்தெடுப்பது ஒன்றும் அவ்வளவு சிரமான வேலையாக இருந்தது இல்லை. சிலருக்கு மட்டும்தான், கணவர் பெயரை சொன்னாலே சட்டென்று மனைவி பெயரோ, அல்லது மனைவி பெயரை சொன்னால் உடனே கணவர் பெயரோ நினைவுக்கு வரும். அப்படியான ஆதர்ஷ தம்பதிகளில் ஒருவர்தான் ஸ்டாலின்-துர்கா தம்பதி.

1975ம் ஆண்டு திருமணம்

1975ம் ஆண்டு திருமணம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகன்தான் மு.க.ஸ்டாலின். இவருக்கும் துர்கா ஸ்டாலின் என்று பரவலாக பதிவாகிவிட்ட பெயருக்கு சொந்தக்காரரான, துர்க்காவதிக்கும் கடந்த 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது. 22 வயதிலேயே ஸ்டாலின் திருமணம் செய்து கொண்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி மண்டபத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அப்போதைய திமுக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில், பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ரூதின் அலி அகமது கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்.

 திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ்

இந்த திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை, இன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாக சுற்றி வருகிறது. பத்திரிக்கையில், ஸ்டாலின், மற்றும் துர்கா ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளது இன்னும் சிறப்பாக உள்ளது. இவர்களது திருமணம் நடைபெற்றபோது, கருணாநிதி முதல்வராக பதவி வகித்தார். முதல்வர் வீட்டு மருமகள் என்ற பெரும் அந்தஸ்தோடுதான் காலடி எடுத்து வைத்தார் துர்கா ஸ்டாலின். ஆனால், அப்படியே வாழ்க்கை வசந்தமாக போய் விடவில்லை. முதல்வர் பதவி ஒரு முள் படுக்கை, அரசியல் வாழ்க்கை, பெரும் புயல் வீசும் கடல் என்பது போகப்போகத்தான் புரிந்தது துர்காவுக்கும்.

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது

ஆம்.. திருமணமாகி 5 மாதங்களிலேயே, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை மத்தியில் இருந்த இந்திரா காந்தி அரசு கலைத்தது. மிசா சட்டத்தின்கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். எங்கே வைத்திருக்கிறார்கள், எப்படி இருக்கிறார் என்று தெரியாத அந்த சூழ்நிலையில், அழுகை மட்டுமே தினமும் கதியாக மாறிப்போயிருந்தது என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் துர்கா ஸ்டாலின். "நான் விபரீதமா ஏதாவது பண்ணிக்கப் போறேன்னு நினைச்சோ என்னவோ என்னோட ரூம்ல இருந்த மாத்திரைகளை எல்லாம் எடுத்து அப்புறப்படுத்தச் சொல்லிட்டார் மாமா (கருணாநிதி)" என்று துர்காவே குறிப்பிடும் அளவுக்கு மோசமாக இருந்தது அந்த காலச்சூழல். வீட்டு சமையல்காரம்மா கூட பயந்து கொண்டு வேலையை விட்டு நின்று கோபாலபுரம் இல்லமே தனித்து விடப்படும் அளவுக்கு ஒரு பயங்கர சூழல் அது. கணவர் நல்லபடியாக திரும்ப வேண்டும் என்று ஒரு நோட்டு புத்தகம் முழுக்க ஸ்ரீராம ஜெயம் எழுதியதாகவும், கிருஷ்ணர் கோவிலுக்கு தினமும் சென்று கண்ணீர் மல்க பிரார்த்திப்பதாகவும் துர்கா தனது அவரும் நானும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பக்திக்கு பெயர் பெற்றவர்

பக்திக்கு பெயர் பெற்றவர்

அவரது பக்திக்கு வீட்டில் யாரும் தடை போட்டது கிடையாது. அன்று முதல் இன்று வரை. ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு துர்காவின் கோவில் வழிபாடுகளும் ரொம்பவே லைம் வெளிச்சத்திற்கு வந்தன. ஆனால் அவர் எதைப் பற்றியும் கண்டுகொள்வதில்லை. குல தெய்வம் கோவில் புனரமைப்பு முதல், புகழ் பெற்ற கோவில்களில் தரிசனம் வரை தனது ஆன்மீக பணிகளை செய்தபடிதான் இருந்தார். பகுத்தறிவு பாதையில் வந்த ஸ்டாலினும் இதற்கு தடை போட்டது கிடையாது என்பது இந்த ஆதர்ஷ தம்பதிகளின் மற்றொரு டிரேட் மார்க்.

உணர்ச்சி பெருக்கோடு ஆனந்த கண்ணீர்

உணர்ச்சி பெருக்கோடு ஆனந்த கண்ணீர்

நாடு முழுக்க உள்ள ஒட்டு மொத்த ஊடகங்களின் கவனத்தையும் துர்கா ஸ்டாலின் சமீபத்தில் ஈர்த்த நிகழ்வு என்றால், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நாள்தான். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. என்று ஸ்டாலின் பதவிப் பிரமாண வாசகங்களை வாசிக்க ஆரம்பித்ததுமே, துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உணர்ச்சிவசப்படும் எந்த ஒரு தருணத்திலும் அழுதுவிடும் குணாதிசியம் கொண்டவர்தான் துர்கா என்பதால், அவரது குடும்பத்தாருக்கு அது பெரிய விஷயமாக தெரிந்திருக்காதுதான். ஆனால், மிசா முதல் முதல்வர் வரை என்ற இறக்க ஏற்றங்களில் உற்ற துணையாக இருந்த ஒருவரின், அன்பின் அடக்க முடியாத, வெளிப்பாடாகத்தான் உலகம் அதை பார்த்தது.

நிழல்போல பயணம்

நிழல்போல பயணம்

முதல்வராகிவிட்டால், ஆள், அம்பு, சேனை என்ற பாதுகாப்பு வட்டத்தில் கணவர் இருப்பார். நாம் இனி ஓய்வெடுக்கலாம் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை துர்கா. ஸ்டாலின் மேற்கொண்ட முதல் டெல்லி பயணத்தில் அவர் கூடவே நிழல்போல சென்றார். டெல்லியில் தனது கணவருக்கு தேவைப்படும் உணவை, நாத்தனார் கனிமொழியோடு சேர்ந்து தயாரித்துக் கொண்டு, தமிழ்நாடு இல்லத்திற்கும், கனிமொழி வீட்டுக்குமாக காரில் பறந்து கொண்டே இருந்தவர்தான் துர்கா ஸ்டாலின். இதனால்தான், ஆதர்ஷ தம்பதி என்றதும் சட்டென நினைவுக்கு வருகிறார்கள் ஸ்டாலினும்-துர்காவும். 46வது திருமண நாளை கொண்டாடும் இந்த தம்பதிக்கு எல்லோரோடு சேர்ந்து நாம் இனிய வாழ்த்துக்களை பதிவு செய்யலாமே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+