ஒன்ஸ்மோர் கேளுங்க சொல்றேன்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில் தோனியை புகழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையை கலகலப்பாக்கினார்.
ஐபிஎல் தொடரில் 4ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்றைய தினம் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்துள்ளேன். என் தந்தை, எனது பேரன், பேத்தி என எனது குடும்பமே தோனியின் ரசிகர்கள். எனக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வம் அதிகம்.
பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் 7 மணிநேரம் இருந்த சடலம்.. உயிரோடு வந்த அதிசயம்.. உத்தப்பிரதேசத்தில் ஷாக்!
மேயராக இருந்த போது
மேயராக இருந்த போது கிரிக்கெட் விளையாடியுள்ளேன். கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளேன். கார்கில் போரின் போது நடந்த சிறப்பு பேட்டியின் போது எனக்கு கபில்தேவுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இது எப்போதும் என் நினைவில் நீங்காமல் உள்ளது. தமிழகத்தின் செல்லப்பிள்ளையாகவே தோனி மாறிவிட்டார்.
மஞ்சள் தமிழர்
நாம் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். தோனியும் கருணாநிதியை போலவே மிகவும் கூலானவர். நெருக்கடியின் போதெல்லாம் கூலாகவே இருப்பார்கள். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை எல்லாம் மறக்கவே முடியாது. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட்டில் முக்கிய இடத்தை தோனி பிடித்துவிட்டார்.
சிக்ஸர்
நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நமது அரசு கொண்டு வரும் திட்டங்களை பார்த்து நான் தினமும் சிக்ஸர் அடிக்கிறேன் என சொல்வார்கள். அப்போது எனது நினைவுக்கு தோனிதான் வருவார். சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர் இவற்றையெல்லாம் தாண்டி சிறந்த கேப்டனாகவும் தோனி இருந்துள்ளார்.
உழைப்பு
இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. இது விளையாட்டிற்கு மட்டுமல்ல, அரசியலுக்கு பொருத்தமாக இருக்கும். அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற சென்னை அணியை வாழ்த்துகிறேன் என்றார். இறுதியாக டியர் தோனி, நீங்கள் இன்னும் பல சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த வேண்டும் என்றார். ஒன்ஸ்மோர் கேளுங்க சொல்றேன் என மீண்டும் அதே கருத்தை கூறி விழாவை கலகலப்பாக்கினார்.