தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்திக்க முதலமைச்சருக்கு ஏன் கூச்சம்..? மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்திக்க முதலமைச்சர் ஏன் கூச்சப்படுகிறார் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திமுக எம்.பி.
நேற்றைய தினம் தர்மபுரியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில், கழகத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டாக்டர் திரு. செந்தில்குமார் அவர்களை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, "நான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்" என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம் மட்டுமல்லாமல்; பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என்றுதான் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

அரசு ஆலோசனை
இதே போல் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் தி.மு.க. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க.,வின் பொதுக்குழுக் கூட்டத்திலோ அல்லது அக்கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களிலோ பங்கேற்க அனுமதி கேட்கவில்லை; கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கோருவது, அரசின் செலவில் - அரசு அதிகாரிகளுடன் - அதுவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் மற்றும் கொரோனா மரணங்களைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத்தான் அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

கற்பனை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இது அடிப்படை உரிமை; அதை ஏதோ இவர்களுடைய சொந்த வீட்டில் சொந்தச் செலவில் தனிப்பட்ட முறையில் நடத்தும் நிகழ்ச்சியாகக் கற்பனை செய்து கொண்டு மறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தைப் புறக்கணிக்கும் கீழ்மை என்பதை முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.மக்களின் பாதிப்பை, மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், பிறகு யாரிடம் முதலமைச்சர் கேட்க மாவட்டங்களுக்குப் போகிறார்?

சந்திக்க கூச்சம்?
கொடிய கொரோனா நோய் குறித்து, களத்தில் மக்களோடு, அவர்தம் எதிர்பார்ப்புகளோடு - உணர்வுகளோடு ஒன்றி நிற்கும் அவர்களிடம் தகவல்களை - பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு ஏன் இந்தக் கூச்சம்? என்னதான் வெட்கம்? ஆய்வுக் கூட்டங்கள் என்ற முறையில், மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து, பொதுத் தேர்தல் வேலைகளையும் சேர்த்துக் கவனித்து, நான் மற்றவர்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, என்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ள அரசுப் பணத்தில் அரசியல் கூட்டங்களை நடத்துகிறேன்; அதில் எப்படி உங்களை அழைக்க முடியும் என்கிறாரா முதலமைச்சர்?

யாருக்காக நீட்டிப்பு?
ஊரடங்கையும் - இ-பாஸ் நடைமுறையையும் 'நீட்டித்து வருவது' உள்ளபடியே கொரோனா நோய்த் தடுப்பிற்காகவா? அல்லது எதிர்க்கட்சிகளைப் பொதுவெளிக்குச் செல்ல முடியாமல், நடமாட இயலாமல் முடக்கி வைத்து விட்டு - மாவட்டம் வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி - வழக்கம் போல் அறிவிப்பு நாடகங்களை வெளியிட்டு, தலைகீழாக நின்றாவது தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் 'தேர்தல் கால நடவடிக்கையா?' என்ற நியாயமான சந்தேகம், அனைத்து நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது இயல்பே அல்லவா?

பிரதான எதிர்கட்சி
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், 'கொரோனா காலத்தில்' நான் அளித்த பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கேட்காத முதலமைச்சர் - இந்த விஷயத்தில், குறைந்தபட்சம் தமிழக சட்டப் பேரவைத் தலைவரின் அறிவுரைக்காவது செவிமடுக்க வேண்டும் என்றும், தி.மு.க. எம்.பி., எம்.எல். ஏ.,க்களை அரசு விழாக்களுக்கும், ஆய்வுக்கூட்டங்களுக்கும் அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி - மக்களின் குறைகளை எடுத்துரைத்துத் தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்!












Click it and Unblock the Notifications