நகைக் கடன் தள்ளுபடி எப்போது.. சட்டசபையில் ஸ்டாலின் சொன்ன "முக்கிய தகவல்!" அதிமுகவுக்கு சரமாரி கேள்வி
சென்னை: திமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 13ம் தேதி நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து 14ம் தேதி விவசாய பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபை கூட்டம்
இந்த நிலையில்தான், பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார்.இதேபோல கடந்த சட்டசபை கூட்டத் தொடருக்கும், இந்த சட்டசபை கூட்டத் தொடருக்கும் இடைப்பட்ட காலத்தில் மறைந்த, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், ஸ்டேன் சுவாமி, இளங்குமரனார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
இதன்பிறகு, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குவதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார், அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்.

நகைக் கடன் தள்ளுபடி
இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து என்றைக்கும் திமுக அரசு பின்வாங்காது. விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஆர்.பி.உதயகுமார் சந்தேகம் தெரிவித்து பேசியுள்ளார். நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஆனால், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இது குறித்து வெள்ளை அறிக்கை மற்றும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம்.

பயிர்க்கடன் முறைகேடு
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்க கணக்கு போட்டு பார்த்தபோது, அதிலும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. எனவே அவற்றை சரிசெய்து தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று நான் உறுதியாக தெரிவிக்கிறேன். பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் எங்கெங்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர், அத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எடுத்துச் சொல்வார்.

பல நிறைவேறவில்லை
அதிமுக ஆட்சியின்போது அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பல. அவற்றை நாங்களும் மறக்கவில்லை, மக்களும் அவற்றை மறக்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆனால், பலவற்றை நிறைவேற்றவில்லை.

செல்போன் எங்கே?
இலவச செல்போன் தருவோம் எனக் கூறினீர்களே தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட் ரூ.25 என சொன்னதை செய்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் கொடுப்போம் என சொன்னீர்கள். ஆனால் யாருக்காவது தந்தீர்களா? குறைந்த விலையில் அவசியமான மளிகை பொருட்கள் கொடுக்கப்படும் என்று அறிவித்தீர்கள். ஆனால் செய்யப்பட்டதா? அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை என்று சொன்ன வாக்குறுதி என்னவானது? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?

வைஃபை வசதி என்னாச்சு?
அனைத்து பொது இடங்களில் வைஃபை இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். எங்காவது ஒரு இடத்தை அப்படி காட்டுங்கள் பார்க்கலாம். டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. பட்டு ஜவுளிப் பூங்காவை சொன்னபடி உருவாக்கினீர்களா? இப்படி நீங்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் பெரிய பட்டியலே இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதி
அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், எங்கள் ஆட்சியில் நாங்களும் செய்ய மாட்டோம் என சொல்வதற்காக அல்ல. உறுதியாக முறைகேடுகளை களைந்து, நிதிப் பற்றாக்குறையை சரிசெய்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதுதான் எங்கள் லட்சியம். அதனால் யாருக்கும் இதில் சந்தேகம் வேண்டாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications