சிஏஏ.. என்ஆர்சிக்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் கைது.. ஸ்டாலின், வைகோ, கனிமொழி கண்டனம்
சென்னை: சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஏழு பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில். "அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம்.
சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் மோசமான ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும்." என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெசன்ட் நகர் கடற்கரைக்கு எதிரே இருக்கும் பகுதியில், சாஸ்திரி நகர் காவல் நிலையத்திலிருந்து வாகனத்தில் சென்ற காவல்துறையினர் கோலமிட்ட பெண்களை தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக பொங்கி எழும் கோபாவேச அலைகளை காவல்துறை மூலம் அடக்கு முறையை ஏவி ஒடுக்கிவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்கள் அவ்வளவு எளிதில் நசுக்கிவிட முடியாது என்பதை வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழியும் கோலம் போட்ட பெண்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களை சென்னை போலீசார் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்தனர்.