சாலை அமைக்கக் கூறினால்... பாலம் கட்டுவோம் என்கிறார்கள்... போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் -ஸ்டாலின்
சென்னை: சென்னை மதுரவாயல் -துறைமுகம் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போடும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளும், அறிவிப்புகளும் போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகவே இருந்து வருகிறது என சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பறக்கும் சாலை
தமிழக உள்கட்டமைப்பின் உன்னத சிற்பியாக விளங்கிய கலைஞர் ஆட்சிக்காலத்தில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்றன. 1815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட 19 கி.மீ. தொலைவினை கனரக வாகனங்கள் அரை மணிநேரத்திற்குள்ளாகக் கடந்து, துறைமுகத்தினை அடைய முடியும் என்பதால் ஏற்றுமதி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் சேர்த்தே அடிக்கல் நாட்டப்பட்டது.
கிடப்பில் திட்டம்
அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் காழ்ப்புணர்வு காரணமாக, பறக்கும் சாலைப் பணியினை முடக்கிப் போட்டார். அவர் முன்வைத்த காரணங்கள் பொருந்தாதவை என்பதை ஆய்வுக்குழுக்களின் அறிக்கைகளும் தெரிவித்தன. போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஈரடுக்கு மேம்பாலம்
மத்திய இணையமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இப்பணி விரைவுபடுத்தப்படும் என அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மத்திய தரைவழிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்த பிறகு, இதனை 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலமாக மாற்ற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
டெண்டர் ஊழல்
பறக்கும் சாலை மேம்பாலத்திற்காக ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரடுக்கு மேம்பாலம் என்பது இதன் கட்டுமானத்தை முற்றிலும் மாற்றி அமைத்து, குலைக்கின்ற-மேலும் அபரிமிதமான கால தாமதம் ஏற்படுத்தும் அறிவிப்பாகும். அத்துடன், போகாத ஊருக்கு வழியைக் காட்ட நினைக்கிறது, டெண்டர் ஊழலுக்காகவே ஆட்சி செய்து கொண்டிருக்கும் திரு. பழனிசாமி அரசு.