வீடு கட்டுவோருக்கு நல்ல செய்தி.. இனி யாருக்கும் லஞ்சம் தர தேவையில்லை.. அடுத்த மாதம் சூப்பர் திட்டம்
சென்னை: தமிழகத்தில் கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் முறையை அமல்படுத்திய அரசு, அடுத்ததாக 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடி அனுமதி வழங்கும் திட்டத்தை ஆகஸ்ட் முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு, வீடு கட்டுவோருக்கு இது வரப்பிரசாதம் ஆகும்.
ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதேநேரம், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் கையூட்டு பெறுவதை தவிர்க்க அதிலும் நடைமுறைகளை மாற்றி அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் கொடுக்காமல் பட்டா வாங்குவதும், பத்திரம் பதிவதும் சாத்தியமாகி வருகிறது.

ஏனெனில் பத்திரப்பதிவு துறை சம்பந்தமாகவும், வருவாய்துறை சம்பந்தமாகவும், ரியல் ஸ்டேட் துறை சம்பந்தமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு வகையான புகார்கள் வந்தன. குறிப்பாக பட்டா மாறுதல் மற்றும் வீடு கட்டுவதற்கான அனுமதி தொடர்பாக ஏராளமான புகார்கள் மற்றும் கோரிக்கைகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கே வந்து கொண்டிருந்தன.
இதையடுத்த முதலவர் மு க ஸ்டாலின், பத்திரம் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தானாகவே பட்டா தரும் வசதியை அறிமுகம் செய்துள்ளார். அதேபோல் ஒரு குறிப்பிட்ட நிலத்தை அப்படியே எந்த உட்பிரிவுகளும் இல்லாமல், எந்த சிக்கலும் இல்லாத இடம் என்றால், ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கப்பட உள்ளது. இந்ததிட்டம் விரைவில் அமலுக்கு வரப்போகிறது.
இது ஒருபுறம் எனில் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு கட்டிட அளவுகளுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு, 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக தற்போது கட்டிட வரைப்பட அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்களை ஒட்டுமொத்தமாக களைவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு அதிக அளவு லஞ்சம், காலதாமதம் என மக்கள் சிக்கல்களை சந்திப்பதால், 2 ஆயிரத்து 500 சதுரடி வரை உள்ள இடங்களுக்கு அதிகபட்சமாக 3,500 சதுரடி வரையும், 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு அவர்கள் வழங்கும் சுய சான்றிதழ் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை வரும் ஆக்ஸ்ட் மாதம் முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்து முடிந்தது. கட்டிடங்கள் சுயசான்றிதழ் திட்டத்திற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய அரசாணை அதிகபட்சமாக இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாகம். அதன்பின் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தின் படி, பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான மனையின் விவரங்கள், உரிமை ஆவணங்கள், சாலையின் அகலங்கள், கட்டிட பரப்பளவு, உயரம் போன்ற விவரங்களுடன் சுய சான்றிதழ் இணைத்து அதற்கான இணையதளத்தில் விண்ணப்பித்தால் உடனே அனுமதி கிடைத்துவிடும். அதற்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். கட்டணம் செலுத்திய உடன் கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்,
அதேநேரம் ஒரே ஒரு விதி இருக்கிறது வீடு கட்டும் இடம், மனை அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். சுய சான்றிதழ் முறையில் அனுமதி வழங்கினாலும், கட்டிட விதிமுறைகள் முழுமையாக பின்பற்ற வேண்டும். இதில் நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை.
சுய சான்றிதழ் மூலம் கட்டிட வரைப்பட அனுமதி வழங்கும் இந்த திட்டம் புதிதாக வீடு கட்டுபவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளிலும் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பொருந்தும் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஒருவர் 1,200 சதுர அடியில் வீடு கட்டி இருந்தால், அதனை 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டிடம் கட்டுவதற்கு சுயசான்றிதழ் முறையில் அனுமதி பெறமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications