மக்கள் உயிர் காப்போம்; அப்பாக்களின் நினைவுகளால்...கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின், கனிமொழி நெகிழ்வு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக லோக்சபா எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளனர்.
கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தலைநிமிர்ந்து வருகிறேன் என்ற தலைப்பில் இன்று காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கருணாநிதி பிறந்த நாள்: தலைநிமிர்ந்து வருகிறேன்-வாழ்த்துகள் சொல்வீர்களா தலைவரே?மு.க.ஸ்டாலின் உருக்கம்
தலைநிமிர்ந்து வருகிறேன் வீடியோ
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என தலை நிமிர்ந்து வருகிறேன்.. வாழ்த்துகள் ஸ்டாலின் என சொல்வீரா தலைவர் அவர்களே! என அதில் ஸ்டாலின் உருக்கமாக பேசியிருந்தார். இதேபோல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அர்ப்பணிப்போம்- ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்வீட்: மக்களின் உயிரைக் காப்பதே நம் தலையாய பணி அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். கொரோனா பேரிடர் ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம்.
நினைவுகளால் நிரம்பி வழிகின்ற-கனிமொழி
திமுக எம்.பி கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன. #HBDKalaignar98 #kalaingarforever என பதிவிட்டுள்ளார்.
உயிர் நெல்மணி- தமிழச்சி
மற்றொரு திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன், நான் உண்ணும் ஒரு பிடி அன்னம் கலைஞரது பெயரெழுதிய உயிர் நெல்மணிகளால் விளைந்தது. நான் அருந்தும் ஒரு துளி நீர் கலைஞரது பெயரெழுதிய மூலக்கூறால் விளைந்தது. நான் சுவாசிக்கின்ற சிறு மூச்சு கலைஞரது பெயரெழுதிய உயிர்க்காற்றால் பிறந்தது. நான் துயிலும் ஓரிரவு உறக்கம் கலைஞரது பெயரெழுதிய நற் கனவுகளால் நிறைந்தது. என் ஊனிலும், உயிரிலும் கலந்திருக்கின்ற ஒப்புயர்வற்ற ஒரே தலைவர், முத்தமிழறிஞரின் பிறந்தநாளான இன்று அவரது புகழினைப் போற்றி வணங்குவோம் என நெகிழ்ந்துள்ளார்.