ஆளுநர் ரவி பதவி நீட்டிக்கப்படுமா? பிரஸ் மீட்டில் டக்கென ரியாக்ஷன் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து கிளம்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், செய்தியாளர்கள், ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்க்ஷன் என்ன தெரியுமா?
சென்னை கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் இன்று கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன்: தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த அரசு விழாவை முடித்து கொண்டு புறப்படும் போது செய்தியாளர்கள் சூழ்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், "நான் ஜனாதிபதியும் இல்லை.. பிரதமரும் இல்லை" என பதில் அளித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் பேசியிருக்கிறேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. வயநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ராகுல் காந்தி மீதான சாதி ரீதியிலான தாக்குதல் குறித்து இப்போது கருத்து கூற முடியாது" எனத் தெரிவித்தார்,
ஆளுநர் பதவிகாலம்: தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் ஆர்.என். ரவியின் பதவிகாலம் இந்த மாதத்தோடு நிறைவடையவுள்ள நிலையில், புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா, அல்லது ஆர்.என்.ரவியின் பதவிகாலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் 10 மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என். ரவி, 2019 ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில், தமிழக ஆளுநராக 2021-ம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார். நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழ்நாட்டில் மூன்று வருடம் என அவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
பதவி நீட்டிப்பு?: தனது பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து அவர் டெல்லியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக ஆளுநராக அவரே தொடர்வார் எனக் கூறப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியான புதிய ஆளுநர்கள் நியமன அறிவிப்பில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. எனவே, ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications