அப்படி பாராட்டி பேசாதீர்கள்.. திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் கண்டிப்பான வேண்டுகோள்
சென்னை : சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம். அமைச்சர்களுக்கு, உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் .
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ. வேலு உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.
தங்கம் கடத்தியதே தப்பு.. வழிபறி நாடகம் போட்டு விபூதி அடிக்க பார்த்த கும்பல்.. 3 பேர் கைது
முன்னதாக அவையின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.
வேண்டுகோள்
அப்போது உரையை ஆரம்பிக்கும் முன்னர் முதல்வர் ஸ்டாலின், சட்டமுன்வடிவு, கேள்வி நேரத்தில் தலைவர்களை புழந்து பேச வேண்டாம் என்று வலியுறுத்தினார். நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான வேண்டுகோள் விடுத்தார்.
தலைவர்கள்
சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த மாதிரியான புகழ்ச்சி உரையை சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் விரயம் ஆவதாக கூறி முதல்வர் ஸ்டாலின், இதனை செய்ய வேண்டாம் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோளை விடுத்தார்.
விதி எண் 110
இதனிடையே சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் கூறும் போது, இலங்கை தமிழர்களுக்கு இவ்வாண்டில் 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்.
புதிய வீடுகள்
இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பு இணைப்பும் வழங்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.