வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க சதி.. ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை: நாளை மறுநாள் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஹிட்லர் மற்றும் முசோலினியின் வாரிசுகள் தான் இந்நாட்டை ஆள்கிறார் களோ என்று அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படக் கூடிய அளவிலே, ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை மத்தியமாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்களின் இறுதியானதும் உறுதியானதுமான நம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான்.
அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிற வலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தக் கூடிய இடமாகும்.
[திடீர் வாக்கு வங்கியாக மாறும் வட மாநிலத் தொழிலாளர்கள்.. என்ன காரணம்.. பரப பின்னணி!]
ஆயுதம் பறிப்பு
ஆனால், அந்த ஆயுதத்தையும் தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் பல மோசடிகளையும் சூழ்ச்சிகளையும் செய்து வருகிறார்கள். இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படி அந்த மோசடிகளைக்களைவதில் உரிய வேகமும் போதிய அக்கறையும் காட்டப்படவில்லை. கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், ஆளுங்கட்சியினர், போலி வாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழக வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன.
தேர்தல் அதிகாரிகளிடம் புகார்
அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை சட்டவிரோத செயல்களைப் பற்றி, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார் கொடுத்த விவரங்களைக் கழகத் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமைக் கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை கழக நிர்வாகிகள் சரியாகவும் முறையாகவும் கடைப்பிடித்திட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
சிறுபான்மையினர் நீக்கம்
இருப்பவர்களை நீக்குகின்ற அதே நேரத்தில், இறந்து போனவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, அவர்களை நீக்குமாறு கழகத்தினரும் மற்ற கட்சியினரும் எடுத்துச் சொன்னால் அந்த வாக்காளர்களை நீக்கி விடாதவாறு ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள். வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு உரிய முகவரியில்லாத போதும் அவர்களின் பெயர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சேர்த்து, வாக்காளர் அடையாள அட்டைகளையும் பெற்றுத் தரும் வேலையை ஆளுந் தரப்பு மேற்கொள்கிறது.
விழிப்புடன் செயல்படுங்கள்
இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்படுவதில் அலட்சியமும், கழகத்தினர், சிறுபான்மையினர், தோழமைக் கட்சியினர் ஆகியோர் சார்ந்த வாக்காளர்கள் பெயர்களை நீக்குவதில் அதிதீவிர அக்கறையும் காட்டி ஆளுங்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, 14ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கழகத்தின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட்டால்தான், வாக்காளர் பட்டியல் மோசடியைத் தடுத்திட முடியும். புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பது என்பதும் மிகவும் முக்கியமான பணியாகும். 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளைஞர்கள் உரிய சான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திட கழக முகவர்கள் துணை நிற்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புக்கான கடைசி முகாம் நடைபெறும் அக்டோபர் 14 காலை முதல் மாலை வரை இந்தப் பணியில் சிறிதும் சோர்வின்றிச் செயல்பட்டால் தான் ஆளுந்தரப்பு மேற்கொள்ளும் மோசடிகளைத் தடுத்திட முடியும். வாக்காளர் பட்டிய லில் உள்ள களைகளை நீக்கினாலே, வெற்றி எனும் பயிர் விரைந்து விளையும். சமுதாய சீர்திருத்தமும் தேர்தல் கள அரசியலும் கழகத்தின் இரு கண்கள்.
ஒரே ஒரு வாக்கும் முக்கியம்
வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நெல்மணிகள். ஒரு நெல் வீணானாலும், தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அது வெற்றியினைப் பாதிக்கும். இளையான்குடி தொகுதியில் கழக வேட்பாளர் மலைக்கண்ணன் ஒரேயொரு வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்ததனை கலைஞர் பல முறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அந்த விழிப்புணர்வுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம் செலுத்திட வேண்டும். இன்று நீங்கள் காட்டும் அக்கறை, நாளை நம்மை வெற்றிக் கரை சேர்க்கும். விழிப்புடன் செயல்பட்டு, வெற்றியினை உறுதி செய்வீர்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.