ராமநாதபுரத்திலிருந்து சென்னை திரும்பியதும்.. ஸ்டாலின் கையில் முக்கிய அஜெண்டா! பரபரக்கும் அறிவாலயம்!
சென்னை: மூன்று நாள் பயணமாக இன்று மாலை மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், வெள்ளிக்கிழமை இரவு சென்னை திரும்பியதும் சனிக்கிழமை முக்கிய கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் நடத்தும் இந்தக் கூட்டத்தில், திமுக சார்பு அணிகளின் செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதனால் அதற்கான ஏற்பாடுகள் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
"நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்" அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து,

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில், 19.8.2023, சனிக்கிழமை, காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் - அனைத்து அணிச் செயலாளர்கள் - அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.''












Click it and Unblock the Notifications