அடங்காத இலங்கை.. தமிழக மீனவர்கள் கைது - நடவடிக்கை எடுங்க! மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
பி.தமிழ்செல்வன்(37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன் விஜி(28), தினேஷ்(26), ரஞ்சித்(27), பக்கிரிசாமி(45), கமல்(25), புனுது(41) மற்றும் கார்த்திக்(27) ஆகிய 8 பேர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 32 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துள்ளனர்.
நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டகாசம்! தமிழக மீனவர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம்! அரசுக்கும் கோரிக்கை
மீனவர்கள் கைது
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை தளத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
முதலமைச்சர் கடிதம்
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினரும் மீனவர்களும் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
11 மீனவர்கள்
அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது, "இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், அவர்களில் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். இதுதவிர ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
நடவடிக்கை தேவை
அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் வாயிலாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.