அம்மா உற்சவர்தான்... அவரையே இயக்கிய சின்னம்மாதான் மூலவர்... சொல்வது அதிமுக எம்எல்ஏ
அதிமுகவில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் அமமுகவில் இணைந்த எம்எல்ஏ ராஜவர்மன், மீண்டும் சாத்தூர் தொகுதி வேட்பாளராக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: அமமுகவில் இணைந்த ஒரே நாளில் சாத்தூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிட்டிங் எம்எல்ஏ ராஜவர்மன். அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் அமமுகவில் இணைந்த ராஜவர்மனுக்கு இன்று போட்டியிட சீட் கொடுத்துள்ளார் டிடிவி தினகரன். கடந்த முறை இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜவர்மன், இம்முறை குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அதில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் அதிருப்தியில் இருந்தார். இன்று சென்னையில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவையும், டிடிவி தினகரனையும் உயர்த்தி பேசினார். எல்லாமே சசிகலாதான். அவர் இல்லாவிட்டால் கட்சியே இப்போது இருந்திருக்காது என்றும் சொன்ன அவர், சசிகலாவினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.
அதிமுக படுதோல்வியடையும் என்று சொன்ன அவர், அதிமுகவில் உண்மையான தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சொன்னார். அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சாபம் விடுவது போலவும் பேசினார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ராஜவர்மன்.
எந்த தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என்று கூறி அமமுகவில் இணைந்தாரோ அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. சாத்தூர் தொகுதியின் வேட்பாளராக எம்எல்ஏ ராஜவர்மனை அறிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். குக்கர் சின்னத்தில் போட்டியிடும் ராஜவர்மன் சொந்த செல்வாக்கில் வெற்றி பெறுவாரா? இல்லை டெபாசிட்டை பறிகொடுப்பாரா மே 2ஆம் தேதி தெரியவரும்.












Click it and Unblock the Notifications