புண்படுத்திட்டே இருக்கீங்க! கருப்பு சட்டையோடு வந்த எடப்பாடி & கோ! எதிர்கட்சி து.தலைவர் விவகாரம் தான்
சென்னை : அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான மோதலில் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றாததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
மிகுந்த பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் இடையே தமிழ்நாடு சட்டசபை கூட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஆளுநர் உரை தொடங்கிய போது திமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது.
ஆளுநர் தரப்புக்கு சாதகமாக அதிமுக பாஜக எம்எல்ஏக்கள் பேசினார். ஆனால் அதிமுகவுக்குள்ளேயே தற்போது மோதல் வெடித்திருக்கிறது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்
ஏற்கனவே அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டார். ஆனால் அதனை சபாநாயகர் அப்பாவு கடந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே அங்கீகரிக்கவில்லை. தற்போதைய கூட்டத் தொடரிலும் அது தொடர்கிறது. ஓ பன்னீர்செல்வத்துக்கு பதிலாக மதுரையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் எம்எல்ஏவும் ஆன ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என பலமுறை எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் வலியுறுத்தப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம்
ஆனால் தற்போது வரை அது ஏற்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அருகருகே அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தக் கூட்டத்துடன் முழுவதும் இருவரும் ஒன்றாகவே அமர்ந்து அவை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

சபாநாயகர் அப்பாவு
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சபாநாயகர் அப்பாவை அதிமுக எம்எல்ஏக்களான கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ் பி வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமித்து எடப்பாடி கொடுத்த கடிதத்தை அளித்து அங்கீகரிக்க வேண்டும் என கூறினர்.

முடிவில் குழப்பம்
அதே நேரத்தில் அதற்கு எதிர்ப்பதமாக முன்னாள் முதல்வரும் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் நேரில் சந்தித்து தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தற்போதைய தேர்தல் ஆணைய பதிவுகளின் படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அங்கீகரித்துள்ளதால் தானே எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிக்க வேண்டும் என கூறினார்.

கருப்பு சட்டை
தற்போது வரை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்காத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது. கூட்டத்தொடரை புறக்கணித்தால் பொதுமக்கள் இடையே தேவையில்லாமல் விமர்சனங்களை சந்திக்க வேண்டும் என்பதால் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகருக்கு எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சட்டசபை கூட்டத்தொடரில் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும் 13ஆம் தேதி வரை கருப்பு சட்டை அணிந்தே எடப்பாடி தரப்பு கூட்டத் தொடரில் பங்கேற்பார்கள் என அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications