“மிஸ்டர் ஹிட்லர்.. இது ஜெர்மனி அல்ல” - நாடாளுமன்றத்தில் ‘வார்த்தை தடை’ - கொந்தளித்த கமல்ஹாசன்!
சென்னை : நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை எம்.பிக்கள் பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‛ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்ல' என விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஊழல், துரோகம், சர்வாதிகாரி என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று மக்களவை செயலர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்துவரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் பாஜக அரசின் இந்த செயல்பாட்டைக் கண்டித்துள்ளார்.

நாடாளுமன்ற மரபு
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடக்கும் போது, நாடாளுமன்ற மரபுப்படி தான் எம்.பிக்கள் பேச வேண்டும். எல்லை மீறி விமர்சிக்கும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. கண்ணியம் குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். இந்த முறைதான் இத்தனை காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

வார்த்தைகளுக்கு தடை
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலர் வெளியிட்டுள்ளார். வரும் ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்ந்நிலையில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.

வெட்கக்கேடு
அதன்படி வெட்கக்கேடு, துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், அராஜகம், சர்வாதிகாரம், சகுனி, ரத்தக்களரி, கொரோனா பரப்புவர், துரோகம் செய்தார், நாடகம், கபடநாடகம், திறமையற்றவர், அராஜகம் செய்பவர், மோசக்காரர், லாலிபாப், பாப்கட், ஒட்டுக்கேட்பு, வாய்ஜாலம், அழிவு சக்தி, இரட்டை வேடம், பயனற்றது, கொடூரமானவர், ஏமாற்றினார், முதலைக் கண்ணீர் உள்ளிட்ட பல வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளாக சர்வாதிகாரம், ஊழல், துரோகம் உள்ளிட்ட வார்த்தைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் உண்மை பேசக்கூடாதா எனக் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல் கண்டனம்
இதுதொடர்பாக மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல. மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களா? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, லோக்சபா செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆபத்தான கருத்து
இந்த வார்த்தைகளை எம்.பிக்கள் பயன்படுத்தினால், அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும். பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது.

மிஸ்டர் ஹிட்லர்
பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா? திருவள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு ‛இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்ல." என கமல்ஹாசன் கடுமையாகச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications