கூலித் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பீடு தர வேண்டும்... பிரதமர் மோடிக்கு கமல் கடிதம்
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள கூலித் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு வருவாய் இழப்பீடு தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தனது கோரிக்கையை குறிப்பிட்டுள்ளார்.
நாடு இக்கட்டான சூழலில் உள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு மானுடச் சமூகம் இதுவரை சந்திக்காத பேரிடர் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம்
மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாராட்டுதலுக்கு உரியது என்றும், அன்றாட கூலி பெறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பெரும்பொறுப்பு அரசுக்கு உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் கமல். கொரோனா வைரஸ் இந்தியாவில் 2-ம் நிலையில் உள்ளதாகவும், மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுத்து வைத்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறுவது வரவேற்க வேண்டிய ஒன்று என கமல் கூறியுள்ளார்.

முறியடிபோம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து சகோதர, சகோதரிகளும் ஒன்றுபட்டு சூழ்நிலையின் அபாயத்தை உணர்ந்து அவசியத்தை உணர்ந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 90 % மக்கள் அன்றாட வருமானத்தை நம்பி வாழ்வாதாரத்துக்கு போராடும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்பதை பிரதமர் மோடி அறிந்திருப்பார் என்றும், இதனால் அவர்களுக்கு உரிய வருவாய் இழப்பீடு தர மத்திய அரசு முன் வர வேண்டும் எனவும் கமல் வலியுறுத்தியுள்ளார்.

கோரிக்கை
பொருளாதார நெருக்கடி சீரமைப்பு குழு விரைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த குழு அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் கமல். மேலும், வரிச்சலுகை, கடனுதவி போன்றவைகள் தொழிலதிபர்களுக்கு செய்யப்படுவதை போல் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்
கூலித் தொழிலாளர்களுக்கான வருவாய் இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்திவிட்டால், உயிரை கொள்ளை கொள்ளும் நோயிலிருந்து மட்டுமல்லாமல் கடன் தொல்லையில் இருந்தும் அவர்கள் காப்பற்றப்படுவார்கள் என கமல் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த விவகாரத்தில் உறுதியாகவும், உணர்வுபூர்வமாகவும் மத்திய அரசு செயல்பட வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக கமல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications