தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்
இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் கேரளாவிலிருந்து பருவமழை துவங்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை செயலர் ராஜீவன் தனது ட்விட்டர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: நாட்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை செயலர் ராஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளதால் அணைகள் நிரம்பியுள்ளன.
எம்கே ஸ்டாலின்னு சொன்ன ஆளுநர்.. முத்துவேல் கருணாநிதினு சொன்ன ஸ்டாலின்.. தலை நிமிர்ந்த அந்த தருணம்
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக உணவு தானிய உற்பத்தியும் அபரிமிதாக உள்ளது. கொரோனா காலத்தில் வேலையிழப்பு ஏற்பட்டாலும் பருவமழை நன்றாக பெய்து விவசாய உற்பத்தி நெல், உணவு தானிய விளைச்சல் நன்றாக இருந்தது.
பருவமழை எப்படி இருக்கும்
தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவாக இருக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதமே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து அறிவித்தது. நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை நீண்ட கால சராசரியின் 98 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
இயல்பான மழை அளவு
ஒடிசா, பீகார், ஜார்கண்ட், வடக்கு-சத்தீஸ்கர், கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் மற்ற எல்லா பகுதிகளிலும் மழை சராசரி அளவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஜூன் 1
நடப்பாண்டுக்கான பருவ மழை ஜூன் 1 ஆம் தேதி சரியாக துவங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் துறை செயலர் ராஜீவன் தனது ட்விட்டர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார், 'இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் கேரளாவிலிருந்து பருவமழை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியாகும். இம்மாத இறுதியில் மே மாதம் 31 ஆம் தேதி அன்று, இந்த ஆண்டுக்கான பருவமழை எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ராஜீவன் தெரிவித்துள்ளார்.
உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு
தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் 2021 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை நீண்ட கால சராசரியின் 103 சதவிகிதத்தில் இயல்பானதாக இருக்கும் என்று கூறியிருந்தது. 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மழைப்பொழிவு இயல்பானதாக இருக்க 85 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகவும், இந்த ஆண்டு நாட்டில் பரவலாக வறட்சி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் ஸ்கைமெட் கூறியது. நல்ல மழையால் நடப்பாண்டு ஆண்டில் மொத்த உணவு தானிய அறுவடை 300 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.