ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் அடுத்த ஆக்ஷன்.. வக்கீல் கிருஷ்ணன் சஸ்பெண்ட்.. பார் கவுன்சில் அதிரடி!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அளித்த புகாரின் பேரில் மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது அகில இந்திய பார் கவுன்சில்.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி, குஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. உணவு டெலிவரி செய்வது போல் இருசக்கரத்தில் வந்த நபர்கள், ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிக் கொன்றனர். ஏற்கெனவே கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளன்று, பழிக்குப்பழி தீர்த்தது அந்த கும்பல்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி என அடுத்தடுத்து காவல்துறையின் கைது நடவடிக்கையில் பெரும் கும்பல் சிக்கியது. அடுத்தடுத்த விசாரணையில் திமுக வழக்கறிஞர் அருள், திமுக நிர்வாகி குமரேசனின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகிகள் மலர்கொடி, ஹரிதரன், காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், பாஜக நிர்வாகி செல்வராஜ் என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிக்கினர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை பிரபல ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் காதலியான பாஜக நிர்வாகியான பெண் தாதா அஞ்சலை என கைது படலம் நீண்டது. வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், அப்பு, நூர் விஜய், ராஜேஷ், கோபி, குமரன், புதூர் அப்பு என மொத்தம் 28 பேரை கைது செய்தது காவல்துறை.
அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜாவை கடந்த இரண்டு மாதங்களாக தேடி வந்த காவல்துறையினர், அவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் தேடி வந்தனர். ஆந்திராவில் கைது செய்து அவரை விசாரணைக்காக வேளச்சேரி காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், சீசிங் ராஜா என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில் என்ற சம்பவம் செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் கிருஷ்ணன் என்ற மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் அடிக்கடி போனில் பேசியதாக, பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். வழக்கு ஒன்றிற்காக வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் செல்போனில் பேசியதாக மோனிஷா போலீசாரிடம் தகவல் அளித்து இருந்தார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது. தாய்லாந்திற்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.
சம்போ செந்தில் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்போ செந்தில், கிருஷ்ணன் மூலமாக ஹரிஹரன் உள்ளிட்டோர் மூலமாக மற்றவர்களை ஒன்றிணைத்ததும் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கர்பூரில் 10 நாட்கள் தங்கியிருந்த கிருஷ்ணனை பிடிக்க தூதரக உதவியை நாடிய நிலையில் துபாய் தப்பியோட்டவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சவுதி அரேபியாவில் நண்பர்கள் உதவியோடு தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்டர்போல் உதவியை நாட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோரை நீக்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications