110 பெண் எம்பிக்கள் இருக்காங்க.. ஆனா ஆய்வுக் குழுவில் ஒரே ஒரு பெண் எம்பி.. கனிமொழி கண்டனம்
சென்னை: 110 பெண் எம்பிக்கள் இருக்கும் போது பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா குறித்த ஆய்வு குழுவில் ஒரே ஒரு பெண் எம்பி நியமிக்கப்பட்டிருப்பது குறித்து திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஜெயா ஜேட்லி கமிட்டியின் பரிந்துரைகளின்படி உயர்த்தப்பட்டது.

எதிர்ப்பு குரல்கள்
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டம் ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் என எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து நாடாளுமன்ற ஆய்வு குழுவுக்கு அனுப்ப கோரிக்கை எழுந்ததை அடுத்து இந்த மசோதா, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

30 ஆண் எம்பிக்கள்
இந்த குழுவில் மொத்தம் 31 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 30 ஆண் எம்பிக்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சுஷ்மிதா தேவ் என்ற ஒரே ஒரு பெண் எம்பியும் இடம் பெற்றுள்ளார்கள். அதாவது பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா குறித்து ஆராய அந்த குழுவில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி
இதுகுறித்து அந்த குழுவில் இடம் பெற்றுள்ள சுஷ்மிதா தேவ் கூறுகையில், இந்த குழுவில் மேலும் பல பெண் எம்பிக்கள் இடம் பெற வேண்டும் என விரும்புகிறேன் என்றார். அது போல் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 21 வயதில் பெண்கள் திருமணம் செய்யலாமா என்ற பெண்களின் தலைவிதியை 30 ஆண் எம்பிக்கள் தீர்மானிப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமொழி எம்பி கண்டனம்
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழியும் ஆய்வு குழுவில் ஒரே ஒரு பெண் எம்பி இடம்பெற்றுள்ளது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நாடாளுமன்றத்தில் 110 பெண் எம்பிக்கள் உள்ளோம். ஆனால் பெண்ணுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் 31 பேரில் 30 பேர் ஆண்கள். பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கிறார்கள். பெண்கள் தொடர்ந்து வாய் பேசாமல் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications