பொய் சொல்லாதீர்கள் சகோதரா.. "மதுரை எய்ம்ஸ்" நட்டா பேசுவதை கேளுங்க.. விடாத மாணிக்கம் தாகூர்
சென்னை: பொய் சொல்லாதீர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஜே பி நட்டா பேசுவதை நன்றாக கேளுங்கள் என மாணிக்கம் தாகூர் மீண்டும் அவருடைய வீடியோவை பதிவிட்டு மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாஜக தலைவர் ஜே பி நட்டா கடந்த வியாழக்கிழமை மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளன என கூறியதாக தெரிகிறது. இது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
நட்டாவின் பேச்சைத் தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசனுடன் சென்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிறைவடைந்த பணிகளை பார்க்கப் போவதாகவும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட போவதாகவும் கூறியிருந்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி எப்போது தொடங்கும்? மா.சுப்ரமணியன் சொன்னது இதுதான்!
தோப்பூர் பகுதி
அதன்படி இருவரும் தோப்பூர் பகுதிக்கு சென்றனர். அங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. சுற்றிலும் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. காலியாக உள்ள அந்த இடத்தில் இருவரும் புகைப்படத்தை எடுத்துள்ளனர். அதில் வெங்கடேசன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகளை முடித்ததற்கு நட்டாவுக்கு நன்றி.
எம்பி வெங்கடேசன்
நானும் மதுரை எம்பி வெங்கடேசனும் தோப்பூர் வளாகத்தில் ஒரு மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம் என வெங்கடேசன் விமர்சித்திருந்தார். அதாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை என்பதுதான் இந்த எம்பிக்களின் குற்றச்சாட்டாகும்.
பாஜக
ஆனால் பாஜகவினரோ மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றுதான் ஜே பி நட்டா கூறினாரே தவிர அவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையே முடிந்து விட்டது என கூறவில்லை என தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் எல் முருகன்
இந்த நிலையில் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு வெங்கடேசனுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் திருச்சியில் கூறுகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டது. என நட்டா கூறியிருந்தார். மருத்துவமனையை கட்டுவதற்கு லோன் வாங்குவதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது போன்ற பணிகள் நிறைவடைந்திருக்கின்றன என்றும் முருகன் கூறியிருந்தார்.
மாணிக்கம் தாகூர்
இதற்கு மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், அன்புள்ள சகோதரர் திரு.முருகன் அவர்களுக்கு தங்களுடைய பேட்டியை சற்று முன்னால் தொலைக்காட்சியில் பார்த்தேன். மீண்டும் பொய் சொல்லுகிறீர்களே சகோதரா உங்களுடைய அகில இந்திய தலைவர் திரு. நட்டா அவர்கள் பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது என்று சொல்லவில்லை அவர் சொன்னது 95 சதவீதம் கட்டிடப் பணிகள் முடிந்துவிட்டது.
வீடியோ பாருங்கள்
அதை மிக விரைவில் பிரதமர் அவர்கள் துவக்கி வைப்பார் என்று சொல்லி உள்ளார். வேண்டுமென்றால் அந்த காணொளியை மீண்டும் ஒருமுறை நன்றாக காணுங்கள் உங்கள் திரு. நட்டா அவர்கள் என்ன சொன்னார்கள் என்று புரியும் தயவு செய்து மீண்டும் பொய் சொல்லி சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள். மதுரை மக்கள் என்றும் ஏமாற மாட்டோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.