“10 அம்புகள்”.. ஆளுநர் மாளிகையின் ரகசிய அவதூறு அறிக்கை.. நேரடியா பதிலளிக்க முடியலயா? முரசொலி நறுக்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசால் அச்சிட்டு கொடுக்கப்பட்ட அறிக்கையில் உள்ளதில் முக்கிய தலைவர்களின் பெயர்கள் உட்பட சில வார்த்தைகள், வாக்கியங்கள், பத்திகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காததற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதற்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் வட்டாரம் தகவல் என்ற தலைப்பில் உலவவிட்டுள்ளதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, "அரசாங்கத்தால் எழுதித் தரப்பட்ட அறிக்கையைப் படிக்காமல் அதில் உள்ள கருத்துகளை நீக்கியும் - புதிய கருத்துகளைச் சேர்த்தும் ஆளுநர் தனது உரையைப் படித்ததும் - அரசால் தயாரித்து வழங்கப்பட்ட அறிக்கையே அதிகாரப்பூர்வமானது என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதும் - இந்தியா முழுமைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
'தமிழ்நாட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம்?' என்ற அவரது ஆராய்ச்சியானது. இதுவரை 'அரசியல்' எதிர்ப்பை மட்டுமே எதிர்கொண்டு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களுக்கு 'மக்கள்' எதிர்ப்பையும் அதிகம் சேர்த்துக் கொடுத்துவிட்டது.

ஆளுநர் மாளிகை வட்டாரமா?
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அவரது நடத்தையானது வேண்டாத்தனமாகவே அனைத்துத் தரப்பினராலும் கண்டிக்கப்படுகிறது. இதற்கு நேரடியாக விளக்கம் அளிக்க முடியாமல் ஒரு அறிக்கையைத் தயாரித்து. கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல் என்ற தலைப்பில் இரகசியமாக உலவ விட்டுள்ளார்கள். இது 10.1.23 நாளிதழில் வெளியாகி இருக்கிறது. தங்களிடம் நேரடியாக பதில் இருந்தால் நேரடியாகவே சொல்லலாம். அதை விடுத்து வட்டாரத் தகவல் என 'வட்டாரமே' தகவலை எதற்காக பரப்பவேண்டும்?

ஏன் சேர்த்தீர்கள்?
1. ஆளுநரின் அறிக்கையை நீக்குகிறேன் என்று அவ்வையாரின் வர யையும் பாரதியாரின் வரியையும் நீக்கிவிட்டார்களாம். திருக்குறள். நாலடியார், நான்மணிக்கடிகையில் இதனை விட நல்ல வரிகள் எல்லாம் இருக் கிறதே, அதனை இவர்கள் ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டால் அது எவ்வளவு விதண்டாவாதமோ அவ்வளவு விதண்டாவாதம் இது. ஏன் பாரதி கவிதையைச் சேர்த்தீர்கள் என்பது அல்ல பிரச்சினை. அதிகாரப்பூர்வ உரையில் இல்லாததை ஏன் சேர்த்தீர்கள் என்பதுதான் கேள்வி.

கையெழுத்து போட்ட ஆளுநர்
2. ஏற்க முடியாத கருத்துகளை நீக்கச் சொன்னோம் என்கிறது அந்த அறிக்கை. அந்த உரையை முழுமையாக ஏற்றுக் கொண்டு வாசிக்க இருப்பதாக 7 ஆம் தேதியிட்ட கோப்பில் கையெழுத்துப் போட்டிருக்கிறாரே ஆளுநர். ஏற்க முடியாத கருத்துக்கள் இருந்தால் அதனை முழுமையாக திருப்பி அனுப்பி இருக்கலாமே?

பெரியார், அண்ணா பெயரை நீக்கியது ஏன்?
3. சுவாமி விவேகானந்தரை நினைவு கூர்ந்தார் ஆளுநர், அதனை எதற்காக நீக்கினார்கள் என்று கேட்கிறது அந்த அறிக்கை. தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பெயரை எதற்காக ஆளுநர் நீக்கினார்? அதற்கு முதலில் பதில் சொல்லட்டும். அதன்பிறகு விவேகானந்தர் விவகாரத்தைப் பார்ப்போம். 'திராவிட மாடல்' கசக்கிறது என்றால், விவேகானந்தர் எதனால் இனிக்கிறது?

உண்மைக்கு மாறாக தகவல்
4. அரசாங்கத்தைப் புகழ்ந்து பேசும் வரிகளைத் தவிர்த்தார் என்கிறது அந்த அறிக்கை. இது உண்மைக்கு மாறான தகவல். அரசாங்கத்தைப் புகழ்ந்தும், முதலமைச்சரை வெகுவாகப் புகழ்ந்தும் உள்ள வரிகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. ஆளுநர் எதைத் தவிர்க்கிறார் என்றால் தமிழ்நாட்டை, திராவிட மாடலை. சமூகநீதியை, தமிழ்நாட்டுத் தலைவர்களைத் தவிர்க்கிறார்.

காமராஜர், அம்பேத்கரை பிடிக்கவில்லையா?
திராவிட இயக்கத் தலைவர்களை மட்டுமல்ல, பெருந்தலைவர் காமராசரையும் பிடிக்க வில்லை. அண்ணல் அம்பேத்கரையும் பிடிக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்னால் பட்டியலின மக்கள் மீது பாசம் இருப்பதைப் போல பேசியவர்தான் இந்த ஆளுநர். 'ஜின்னாவைப் போல அம்பேத்கரையும் மாற்றப் பார்த்தார்கள் பிரிட்டிஷார்'என்று பேசியவர்தான் ஆளுநர். இப்போது அம்பேத்கர் பெயரையும் தவிர்க்கிறார் என்றால் அவரது உள்ளார்ந்த ஈடுபாடு அம்பேத்கருக்கு எதிரானது என்பதை இதன் மூலமாக அறியலாம்.

ஆளுநரின் அறிக்கை
5. ஆட்சியின் கொள்கையைப் பேச முடியாது என்கிறது அந்த அறிக்கை. அரசாங்கத்தின் கொள்கையைப் பேசுவதுதான் ஆளுநரின் அறிக்கை. செயல்திட்டங்களை நிதிநிலை அறிக்கையும், மானியக் கோரிக்கைகளும் சொல்லும். இந்த அடிப்படை அறிவுகூட அந்த அறிக்கையை உலவவிட்டவருக்கு இல்லை.

அவதூறு அறிக்கை
6. இந்த மாநிலம் அமைதியாக இல்லை என்கிறது அந்த அறிக்கை. இந்த மாநிலம் அமைதியாக இல்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஐந்து வெடிகுண்டு சம்பவங்களை ஆளுநர் மாளிகை அறிக்கையாகக் கொடுக்கட்டும். பார்க்கலாம். எதற்காக இத்தகைய அவதூறு அறிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிடுகிறது. இந்த மாநிலம் அமைதியாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லையா? அமைதியைக் குலைக்க முயற்சிப்பவர்கள் யார்?

மீனவர்கள் விடுதலை
7. இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும்? என்று கேட்கிறது அந்த அறிக்கை. பழனிசாமி ஆட்சியை விட வேகமாக மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு இன்றைய மாநில அரசின் அழுத்தம்தானே காரணம். 'நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவன் கூட கைது செய்யப்பட மாட்டான்" என்று 2014 தேர்தலுக்கு முன்னால் இராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் சொன்னவர் மோடி. இந்த எட்டு ஆண்டுகளில் இந்திய மீனவர் எவரும் கைதாகவில்லையா? கொல்லப்படவில்லையா? இதுவும் மோடி அரசின் சாதனையா? சொல்வாரா ஆளுநர்?

ஆளுநருக்கு எதிராக முழக்கம்
8. சட்டசபை உறுப்பினர்கள் ஆளுநரைச் சுற்றி நின்று உரையை வாசிக்க விடாமல் கோஷமிட்டு கேரோ செய்தனர். இது இதற்கு முன் நடக்காத ஒன்று என்கிறது அந்த அறிக்கை. ஆளுநருக்கு எதிராக முழக்கமிடுவது ஜனநாயக உரிமை ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டு, வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். எனவே, இது காணாத காட்சி அல்ல.

ஆளுநருக்கு எதிரான தீர்மானம் அல்ல
9. "சபை மரபை மீறி முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்" என்கிறது அந்த அறிக்கை. ஆளுநருக்கு எதிராக எந்தத் தீர்மானமும் கொண்டுவரவில்லை. 'அரசின் அதிகாரப்பூர்வ உரையை அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும்' என்பதே முதலமைச்சரின் தீர்மானம் ஆகும். இதுவும் சபை மரபை மீறிய செயல் அல்ல, சபை விதியைத் திருத்தி அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஏன் முன் வந்தார்?
10. ஆளுநரின் உரை என்பது அரசாங்கத்தின் உரையாகும். அரசாங்கம் தயாரித்த உரையை அவர் வாசித்தாரா இல்லையா? ஏன் வாசிக்க வில்லை? வாசிக்க மனமில்லை என்றால் அவரே முன்வந்திருக்கக் கூடாது. வருகை தந்து, வாசிக்க மறுத்ததும், மாற்றி வாசித்ததும், சேர்த்து வாசித்ததும் சட்டசபையின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்பதை கவர்னர் வட்டாரம் முதலில் உணர வேண்டும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications