யார் வீட்டில் தெலுங்கில் பேசுகிறார்கள்? பொய்மான் ஆக வேண்டாம் தமிழிசை? முரசொலி அட்டாக்
சென்னை: யார் வீட்டில் தெலுங்கில் பேசுகிறார்கள் என்பதை தமிழிசையால் நிரூபிக்க முடியுமா? தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட போது விரைவில் தெலுங்கில் பேசுவேன் என மாட்லாடியது யார் என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து முரசொலியில் வெளியான கட்டுரையில், தெலுங்கானா ஆளுநர் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்னும் பல உயரங்களை அடைய விரும்புகிறார். அடையட்டும். தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என்று நினைக்கலாம். அல்லது நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஒன்றிய அமைச்சர் ஆகலாம் என நினைக்கலாம். அவரது ஆசை, அது பேராசையாகவும் நிராசையாவதும் அவரது எச்சத்தால் காணப்படும்.
ஆனால் திமுகவையும் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்த கலைஞர் குடும்பத்தை இழிவுப்படுத்துவதன் மூலமாக பெயர் அடைய தமிழிசை நினைப்பதுதான் அருவெறுப்பானது. தமிழ் இலக்கிய படித்த தமிழிசையை தரங்கெட்ட அளவுக்கு தரைமட்டத்துக்கு அவரது அரசியல் மோகம் பாழ்படுத்திவிட்டது என்பதை அவரது பேச்சுகள் மூலமாகத் தெரிகிறது.

தெலுங்கில் பேசி தமிழ் வேடமா
வீட்டில் தெலுங்கு பேசிக் கொண்டு தமிழ் வேடம் போடுகிறது என தலைவர் குடும்பத்தை மறைமுகமாக தமிழ்வசை பாடியிருக்கிறார். யார் தெலுங்கில் பேசுகிறார்கள் என்று அவரால் நிரூபிக்க முடியுமா? நான் விரைவில் தெலுங்கில் பேசுவேன் என தெலுங்கானாவில் ஆளுநராக பதவியேற்கும் போது மாட்லாடியது மறந்து போச்சா? தமிழிசையின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியவர் கருணாநிதி, தமிழிலா- தெலுங்கிலா எதில் வாழ்த்தினார் கலைஞர்?

ஆண் மான் பெண் மான்
கலித்தொகா பாட்டில் ஆண் மான் பெண்மான் கதையைச் சொன்னாரே கலைஞர்? ஆனால் ஒரு காலத்தில் தமிழிசை பொய்மான் ஆவார் என பாவம் கலைஞர் நினைக்கவில்லை! ஆகஸ்ட் 19 ஆம் தேதி கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு முன்பு கிருஷ்ணன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தார் தமிழிசை. அரை நூற்றாண்டு காலத் தமிழகத்தின் தமிழனத்தின் தாய் வீடாம் கலைஞர் இல்லத்துக்குள் வந்தார். செல்வி அவர்கள் தமிழிசையை அன்போடு அழைத்துச் சென்றாரோ... தெலுங்கிலா வரவேற்றார்? உள்ளத்தால் பொய் சொல்லி வாழ்ந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எத்தனையோ தமிழ் பாட்டுகள் சொல்லி இருக்கின்றன.

கருணாநிதி மறைந்த போது தமிழ் சூரியன்
கலைஞர் அவர்கள் மறைவுற்றபோது மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்திவிட்டு "வானமே மங்கி இருக்கிறது ஏனென்றால் ஒரு தமிழ்ச் சூரியன் மறைந்திருக்கிறது" என சொன்ன தமிழிசை இன்று தமிழ் வசையாக ஆனது எதற்காக எதற்காக? பாஜக தலைமை அவருக்கு ஒரு பொறுப்பை வழங்கி இருக்கிறது. தெலுங்கானா ஆளுநர் , கூடுதலாக புதுவை துணை நிலை ஆளுநர் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் மாநில அரசுகளின் மாண்புக்களுக்கும் கட்டுப்பட்டு அவர் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் அரசியல்
தெலுங்கானாவில் அவருக்கும் அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் பிரச்சினை இருக்கலாம். அதனால் அங்கு அவருக்கு இருக்க முடியாமல் போகலாம். புதுவையை தனது தகுதிக்கு சிறிய மாநிலமாக நினைக்கலாம். அதனால் அங்கும் இருக்கப் பிடிக்காமல் இருக்கலாம். அவை பிடிக்கவில்லை என்றால் பதவி விலகிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து அரசியல் நடத்தலாம். அதைவிட்டுவிட்டு வேற்று மாநில ஆளுநராக இருந்து கொண்டு இங்கு அரசியல் செய்ய கூடாது. இது அவர் வகிக்கும் பதவிக்குரிய பணிகள் அல்ல.

மாநிலத்தின் சுருக்கெழுத்தாளர்
Shamsher Singh V. State of Punjab (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central government." என்ற சொன்னது. அதாவது தெலுங்கானா, புதுவை மாநிலத்தின் சுருக்கெழுத்தாளர் இங்கு வந்து தலையை நுழைப்பேன் என்பது ஏற்ற பொறுப்புக்கே ஏற்றது அல்ல.

தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி அவர்கள் தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துகளைச் சொல்லி வருகிறார். இதற்கு திமுகவும் முரசொலியும் வலுவான விளக்கத்தைச் சொல்லி வருகிறது. இதற்குள் எதற்காக தமிழிசை தலையை நுழைக்க வேண்டும்? தமிழக ஆளுநருக்கும் இவர் shorthand expression ஆக நினைக்கிறாரா? இவ்வாறு தமிழிசை குறித்து முரசொலியில் கண்டன கட்டுரை வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications