நம்ம சென்னையா? ‘உதவாக்கரை’ பழனிசாமி ஆட்சி.. ‘உழைப்பு’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! விளாசிய முரசொலி!
சென்னை : சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் சரியில்லையென அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ள நிலையில், 'உதவாக்கரை' பழனிசாமி ஆட்சிக்கும் 'உழைப்பு' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான் என முரசொலி தலையங்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கட்டுரையில், அ.தி.மு.க. ஆட்சியில் மழைக் காலத்தில் வெள்ளக்காடாக மிதந்தது சென்னை. ஆனால் இன்று மழை பெய்த வேகத்தில் தண்ணீர் வெளியேறி மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கக் கூடியதாக செயல்படுத்திக் காட்டி இருக்கிறது தி.மு.க. ஆட்சி!
மனச்சாட்சியுள்ள ஊடகங்களாக எழுதும், காட்சிப்படுத்தும் ஊடகங்கள் இதனை ஒப்புக் கொண்டு வெளிப்படையான பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.

வடகிழக்குப் பருவமழை
வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் மழை நீர் எங்கும் தேங்கவில்லை. வந்த வேகத்தில் போய்விட்டது. நிர்வாக இயந்திரம் அதனை அப்புறப்படுத்தி வருகிறது.20 ஆயிரம் மாநகராட்சிப் பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 15 மண்டலங்களில் 200 வார்டுகளில் 20 ஆயிரம் பணியாளர்கள் மழை நீர் தேங்காமலும், வழக்கமான பணிகள் பாதிக்காமல் இருக்கவும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

பாதிப்பு இல்லை
கடந்த ஆண்டு மழையின் போது 500க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த முறை 420 இடங்களில் மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளது எனவும் அதில் 56 பம்புகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிகால் வழியாக வெளியேறி வருவதால் அதிக அளவில் பம்புகள் தேவைப்படவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் இரண்டு இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது.

சொட்டு தண்ணீர் இல்லை
எந்தப் பகுதியிலும் மின் தடை ஏற்படவில்லை என்பதையும் சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டுள்ளார்கள். எந்தளவுக்கு அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது உதாரணம் ஆகும். கடந்த முறை பா.ஜ.க. அண்ணாமலை படகுப் பயணம் செய்த இடத்தில், இந்த முறை ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. பல பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் அன்றும் இன்றும் என்று ஒப்பிட்டு இணைய தளங்களில் தங்களது பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.

வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டதால், கடந்தாண்டைப்போல் இந்தாண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை என "தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு" பாராட்டியுள்ளது. அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்த ஆண்டு பருவமழையின் முதல் நாள் எதிர்பார்த்தது போலவே தீவிரமாக இருந்ததாகவும், ஆனால் சென்னையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் காரணமாக 24 மணி நேர இடைவிடாத கனமழையால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சம் 2 மணி நேரத்திற்குள் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் வெளியேறியதை செய்தியாளர்களின் கள ஆய்வுகளில் தெரியவந்ததாகவும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே இதற்கு காரணம் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்
பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 163 இடங்களில் உணவுடன் கூடிய சிறப்பு முகாம்களை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது இக்கட்டுரை. இதேபோல், சென்னை மாநகராட்சி மேற்கொண்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை 'தி இந்து' நாளிதழும் பாராட்டி உள்ளது. பருவமழையின் போது, வழக்கமாக தண்ணீர் தேங்கும் சாலைகள் இம்முறை பாதிக்கப்படவில்லை என்றும் 'தி இந்து' தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள 'தி இந்து', நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

நம்ம சென்னையா இது - அன்று இன்று
எழும்பூர் ரயில்வே பாதைகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்துள்ள சென்னை மாநகராட்சியை தெற்கு ரயில்வே கோட்டம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. 'நம்ம சென்னையா இது - அன்று இன்று' என்று எடுத்துப் போட்டு செய்தி ஆக்கி உள்ளது 'தந்தி டி.வி.' வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் எங்கும் தண்ணீர் நிற்கவில்லை. வடிகால் பணிகள் நடந்து வரும் இடங்களில் தேங்கும் தண்ணீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கும் தி.மு.க. ஆட்சிக்குமான வித்தியாசம் என்பது இதுதான்! 'உதவாக்கரை' பழனிசாமி ஆட்சிக்கும் 'உழைப்பு' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்!












Click it and Unblock the Notifications