"முருகன் மாநாடு தீர்மானங்கள்!" திமுகவுக்கு சப்போர்ட்டாக வந்த வானதி சீனிவாசன்- ஆனா கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்துக்களின் எழுச்சி காரணமாகவே முருகன் மாநாடு நடந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மாநாட்டுத் தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் கடந்த வாரம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது..

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் காணொலி வாயிலாக உரையாற்றினர். அதைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.
தீர்மானங்கள்: இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் பள்ளி, கல்லூரிகளில் 'முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி' போட்டிகள் நடத்தவும், அந்த கல்வி நிலையங்களில் 'சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள்' அறிமுகப்படுத்தவும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும், மாணவர்களைக் கொண்டு முருகன் கோயில்களில், 'கந்தசஷ்டி பாராயணம்' செய்யப்படும் என 21 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
இதற்கு திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டெங்கு போல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றவர்களே இப்போது முருகன் மாநாட்டை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர், அந்த மாநாட்டில் போட்ட தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வானதி சீனிவாசன்: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் சார்பில் பழநியில் ஆகஸ்ட் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.
விழாக் காலங்களில் முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும். முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சப்போர்ட்: முருகன் மாநாட்டை நடத்தியதில் திமுக அரசுக்கு பல்வேறு உள்நோக்கங்கள் இருந்தாலும் இந்த தீர்மானங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. ஆனால், இந்த தீர்மானங்களுக்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்து கோயில்களை மட்டும் அரசு நிர்வகிப்பது தான் மதச்சார்பின்மையா? இந்து கோயில்களை நிர்வகிக்கும் அரசு, இந்து மத நிகழ்ச்சிகளை நடத்தித்தானே ஆக வேண்டும்.
அடுத்து சொன்ன பாயிண்டு: இந்துக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவது போல நிறைவேற்றி விட்டு, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை காரணம் காட்டி அதை செயல்படுத்தாமல் இருக்க திமுக அரசு போடும் நாடகமோ? இது என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மலேரியா, டெங்கு போல சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என மாநாடு போட்டு பேசியவர்கள், இன்று முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகின்றனர். இந்துக்களிடம் ஏற்பட்ட எழுச்சியே இதற்கு காரணம்.
எனவே, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு அடிபணியாமல் பழநி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications