நேற்று திமுக மீது திடீர் கரிசனம்- இன்று திருமாவளவன் தாயாருடன் சந்திப்பு.. சீமான் போடும் கணக்கு?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கூட்டணி குறித்து இடைவிடாத விவாதங்கள் ஓய்வின்றி நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பரபரப்புகளுக்கு நடுவே திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் தாயாரை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருப்பதும் கூட விவாதத்துக்குரியதாக மாறிவருகிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறதே.. என பொதுமக்கள் நினைக்கலாம்.. ஆனால் அரசியல் கட்சிகளோ இப்போதே அணி சேர்க்கை குறித்த ஆய்வுகள், விவாதங்கள், எண்ண ஓட்டங்கள் என களத்துக்கு தயாராக நிற்கின்றன.
திமுக மீது செல்ல கோபம்தான்.. சீமான் திடீர் பல்டி! அப்ப 'அதை' கழற்றி காண்பிச்சது? வன்னி அரசு கேள்வி!
கூட்டணி கால்குலேசன்கள்
அதிமுக தலைமையில் பாஜக இடம்பெறும் மெகா கூட்டணி அமையுமா? என்பது ஒரு கேள்வி. பாஜக அல்லாமல் அதிமுகவின் எடப்பாடி தரப்பு மெகா கூட்டணியை உருவாக்குவாரா? என்பது மற்றொரு கேள்வி. இப்போது மிக மிக வலிமையாக இருக்கும் திமுக கூட்டணிக்கு பாஜக வேட்டு வைத்தால் வெளியேறும் கட்சிகள் எவை? அதனை வாய்ப்பாக பயன்படுத்தி திமுக அணிக்குள் உள்ளே நுழைய காத்திருக்கும் கட்சிகள் எவை? இப்படித்தான் விவாதங்கள் சூடு பறக்க நடக்கின்றன.
சீமான், திருமாவளவன்
இந்த விவாதங்களுக்கு மத்தியில்தான் அரசியலில் எதிரும் புதிருமாக நிற்கும் நாம் தமிழர் கட்சி சீமானும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அண்மைக்காலமாக அடிக்கடி ஓர் புள்ளியில் இணைவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம், தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த சட்டப் போராட்டம் நடத்தியது. அப்போது திருமாவளவன், மதநல்லிணக்க மனித சங்கிலி நடத்துவதாக அறிவித்தார். அந்தப் போராடத்துக்கு முதல் ஆதரவை தெரிவித்திருந்தார் திருமாவளவன்.
திருமாவளவன் தயாருடன் சந்திப்பு
திருமாவளவனும் சீமானும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். இரு கட்சிகளும் தமிழ்த் தேசிய கட்சிகள். இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு தேர்தல் அரசியலில் பங்கேற்கக் கூடிய அரசியல் கட்சிகள். இரு கட்சிகளின் 2-ம் நிலைதலைவர்கள் மிக கடுமையாக முட்டி மோதிக் கொண்டாலும் சீமானும் திருமாவளவனும் விட்டுக் கொடுக்காத உடன்பிறந்தாராக உலா வருகிறவர்கள். இப்போது திருமாவளவனின் தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அன்பு பாராட்டி இருக்கிறார் சீமான்.
வேல்முருகனும் சீமானும்
அதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை எப்போதும் 'இரத்தம்' என பாசத்துடன் அழைப்பவர் சீமான். நாம் தமிழர் கட்சியை தொடங்கிய போது அக்கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என வேல்முருகனைத்தான் அழைத்தார் சீமான். என்னதான் வேல்முருகன் தனிக் கட்சியை நடத்தினாலும் சீமானுடன் முரண்படாமல்தான் இருக்கிறார். திருமாவளவனும் வேல்முருகனும் இப்போது திமுக கூடணியில் இருக்கின்றனர். சீமானும் திமுக மீது திடீர் பாசத்தைக் காட்டி வருகிறார். முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்கிறார்; திமுக மீது இருப்பது செல்ல கோபம் என்கிறார். இப்படி திமுக மற்றும் திமுக அணியில் இருக்கும் கட்சிகளுடன் நல்லுறவை சீமான் பாராட்டுவது எதற்காக இருக்கும்? என்கிற கேள்வி எழாமல் இல்லை.
சீமான் கணக்கு இதுவா?
சீமான் அளித்த பேட்டியில், பொது எதிரி பாஜகவை உள்ளே வரவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம் என்கிறார். பொது எதிரி பாஜகவுக்கு எதிராக கரம் கோர்ப்போம் என்ற அடிப்படையில் திமுக கூட்டணிக்கு போகாவிட்டாலும் ஒருவகையான உடன்பாடுடன் 2024 லோக்சபா தேர்தல் களத்தை சீமான் எதிர்கொள்ளலாம்; குறிப்பாக வடதமிழகத்தில் அத்தனை கரங்களும் ஒன்றிணைந்தால் மாஸ் வெற்றிதான் என கணக்குப் போட்டிருக்கலாம் என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.