உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறும் நிலையிலும்.. அமைச்சரிடம் நல்லகண்ணு வைத்த பொதுநல கோரிக்கை! செம!
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூழலில், தன்னைச் சந்திக்க வந்த அமைச்சரிடம் நல்லகண்ணு, மக்கள் நலனுக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : பொதுவாழ்வில் நேர்மையும், தூய்மையும் கொண்ட வெகுசில அரசியல்வாதிகளுள் முக்கியமானவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. 97 வயதான நல்லகண்ணு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தன்னை சந்தித்து நலம் விசாரிக்க வந்த அமைச்சரிடமும் பொதுநலக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் நல்லகண்ணு.
தன்னை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று நல்லகண்ணு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு மற்றும் சில உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு சமீபத்தில் தனது 97வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கிருமி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
உடல் நலனில் முன்னேற்றம்
இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நேரில் சென்ற அமைச்சர்
மேலும் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருக்கு தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நல்லகண்ணு ஐயாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணு வைத்த கோரிக்கை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நல்லகண்ணுவைச் சந்தித்து உடல் நலம் பற்றி விச்சரித்த போதும், பொதுமக்கள் நலனுக்காக ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் தோழர் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் அங்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற அமைச்சரிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்துள்ளார். உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூழலிலும், தன்னைச் சந்திக்க வந்த அமைச்சரிடம் நல்லகண்ணு, மக்கள் நலனுக்காக கோரிக்கை விடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.