நெடுஞ்செழியன், ஆர்எம் வீரப்பன்...நயினார் நாகேந்திரனின் நெல்லை தொகுதிக்கு இப்படி ஒரு சுவாரசிய வரலாறு!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்வாகும் நயினார் நாகேந்திரன் மூலம் அவர் போட்டியிட்டு வென்ற திருநெல்வேலி சட்டசபை தொகுதிக்கு கூடுதல் பெருமை கிடைத்துள்ளது. ஆமாம்.. நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு வென்ற நெல்லை தொகுதியில்தான் முதுபெரும் அரசியல் தலைவர்களாக இரா.நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், ஜிஆர் எட்மண்ட், ஏ.எல். சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் வென்றனர் என்பது வரலாறு.
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் 2001-ம் ஆண்டில் இருந்து நயினார் நாகேந்திரன் தவிர்க்கப்படாத சக்தியாக இருந்து வருகிறார். 2001-ம் ஆண்டு திமுகவின் முதுபெரும் தலைவரான முன்னாள் மேயரும் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பருமான ஏ.எல்.சுப்பிரமணியத்தை தோற்கடித்தார் நயினார் நாகேந்திரன். 2006-ம் ஆண்டு தேர்தலில் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார்.

2011-ம் ஆண்டு மீண்டும் ஏ.எல்.எஸ் எனப்படும் ஏ.எல்.சுப்பிரமணியன் மகன் ஏ.எல்.எஸ். லட்சுமணனை தோற்கடித்து எம்.எல்.ஏ.வானார் நயினார் நாகேந்திரன். 2016-ம் ஆண்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.எல்.எஸ். லட்சுமணனிடம் தோற்றார் நயினார் நாகேந்திரன். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு ஏ.எல்.எஸ். லட்சுமணனை வீழ்த்தினார் நயினார் நாகேந்திரன்.
திருநெல்வேலி தொகுதியின் எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரன், தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இதே நெல்லை தொகுதியில்தான் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களான அதிமுகவின் ஜிஆர் எட்மண்ட் இரா.நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரும் போட்டியிட்டு வென்றனர்.
ஜிஆர் எட்மண்ட், தமிழக சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர்- அமைச்சராகப் பணியாற்றினார்; டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாகவும் இருந்தார்.
நாடறிந்த தலைவர்களில் ஒருவர்..அறிஞர் அண்ணாவால், தம்பி வா! தலைமையேற்க வா என அழைக்கப்பட்டவர் திமுகவில் அண்ணாவுக்கு அடுத்தவராக, அதிமுகவில் எம்ஜிஆருக்கு அடுத்த தலைவராக திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியனும் இதே நெல்லை தொகுதியில் 1980-ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். எம்ஜிஆரின் வலது கரம் அல்லது மனசாட்சியான ஆர்.எம்.வீரப்பன் 1986-ம் ஆண்டு இடைத்தேர்தலில் நெல்லையில் போட்டியிட்டு வென்றார். இந்த இடைத்தேர்தல் வெற்றி குறித்து கருணாநிதி பாடிய கவிதை இன்றைக்கும் பேசு பொருளாகும். "விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்த திருடன்.. அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு அகப்படாமல் ஓடியதுபோல்... அருப்புக்கோட்டை, நெல்லை தொகுதிகளை வென்றுவிட்டார்." என்று விமர்சித்திர்ருந்தார் கருணாநிதி.
இத்தகைய சிறப்புமிக்க திருநெல்வேலி தொகுதியின் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், இப்போது தமிழ்நாடு பாஜக தலைவர்!












Click it and Unblock the Notifications