நீட் விவகாரம்.. ஹைகோர்ட் எழுப்பிய கேள்வி.. மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை
சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். முதல்வருடனான ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பங்கேற்றார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்று ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்தது. தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி இதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்ன கூறியிருந்தார்
இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு குழு
மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்கதல்ல.

மாணவர்கள் குழப்பம்
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது. ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கை முடிவு
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முரண்பாடு உள்ளதாக கேள்வி
ஆனால் நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைத்தனர்.

வழக்கறிஞர்களுடன் ஆலோசனை
இந்நிலையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். முதல்வருடனான ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பங்கேற்றார். இந்த ஆலோனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications