தமிழகம் அழைத்துவரப்பட்ட நெல்லை கல் குவாரி உரிமையாளர்கள்.. போலீஸ் நிலையத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை
சென்னை: திருநெல்வேலி கல்குவாரி விபத்து தொடர்பாக கர்நாடக மாநிலம் மங்களூரில் பதுங்கிய கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் தமிழகம் அழைத்து வந்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவில் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் உள்ளது.
இங்குள்ள கல்குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த இடிபாடுகளுக்குள் 6 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை கல்குவாரி விபத்து..! பாறைக்கடியில் வந்த துர்நாற்றம்! 6வது நபரின் நிலை என்ன? பரபர பின்னணி..!
இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 பேர்
பொக்லைன் மற்றும் லாரி டிரைவர்களான நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), பொக்லைன் கிளீனர் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
தொடரும் மீட்பு பணி
இதில் செல்வகுமார், செல்வம், முருகன் ஆகியோர் பலியானார்கள். விட்டிலாபுரம் முருகன், நாட்டார்குளம்விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தச்சநல்லூர் அருகே ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரனை தேடும்பணி நடந்து வருகிறது. மழை பொழிவு, பாறை சரிவால் அவ்வப்போது மீட்பு பணி பாதிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் கைது
இதற்கிடையே கல்குவாரி உரிமையாளர்கள் தப்பித்து சென்றனர். விபத்து தொடர்பாக திசையன்விளையை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். கர்நாடக மாநிலம் மங்களூரில் பதுங்கிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் விசாரணை
இந்நிலையில் மங்களூரில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பபட்டனர். அங்கு ஏஎஸ்பி ரஜத்சதூர்வேதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விபத்துக்கான காரணம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.