நாவடக்கம் தேவை.. கமல் பற்றி பகீர் பேச்சு.. என்ன இருந்தாலும் செந்தில்பாலாஜி அப்படி பேசி இருக்க கூடாது
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி சொன்ன கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் இந்த விமர்சனம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்னொரு மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது.. வலுவான மூன்றாவது அணியை உருவாக்கி தேர்தலை சந்திப்பதற்காக மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது.
தேர்தல் நெருங்க நெருங்க மக்கள் நீதி மய்யத்திற்கும், திராவிட கட்சிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதிலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவை கடுமையான விமர்சனம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கமல்ஹாசன்
இந்த நிலையில் நேற்று பிரசாரத்தின் போது பேசிய கரூர் திமுக வேட்பாளர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி.. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்படும். கரூரில் இதற்கு இருக்கும் தடைகள் அகற்றப்படும். இதற்கு தடையாக இருக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பதிலடி
இதற்கு பதில் சொன்ன கமல்ஹாசன், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம், என்று கமல்ஹாசன் நேற்று குறிப்பிட்டு இருந்தார்.

செந்தில் பாலாஜி
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நேற்று இரவு பதில் சொன்ன செந்தில் பாலாஜி.. கமல்ஹாசன் அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார். மாட்டு வண்டியில் மணல் அள்ளும் மக்கள் அனுமதி பெற்றுத்தான் செய்கிறார்கள். திருச்சி, தஞ்சையில் எல்லாம் இது அனுமதி பெற்று நடக்கிறது. கரூரில் மட்டும் இதற்கு அனுமதி இல்லை. இதை நம்பி பல குடும்பங்கள் உள்ளன.

15 ஆயிரம் குடும்பங்கள்
15 ஆயிரம் குடும்பங்கள் இந்த மாட்டு வண்டி மணல் வியாபாரத்தை நம்பி உள்ளன. அதை தடுக்க கமல் நினைக்கிறார் . அவருக்கு தைரியம் இருந்தால் இங்கு நேரடியாக வந்து பேசட்டுமே? என்று செந்தில்பாலாஜி குறிப்பிட்டு இருந்தார். இதில் செந்தில் பாலாஜி சொன்ன சில விஷயங்களில் நியாயம் இருந்தாலும் அவர் இதை சொல்லிய விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளன.

விமர்சனம்
கமல்ஹாசனை அரைவேக்காடு என்று செந்தில் பாலாஜி கூறியது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. செந்தில் பாலாஜியை இதனால் பலரும் விமர்சித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் .. ஆனால் அதை சொல்வதற்கு ஒரு வரையறை, முறை உள்ளது. இப்படி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ய கூடாது.

தனி நபர்
தனி நபர் தாக்குதல்களை செய்ய கூடாது. கமலின் கருத்தை கருத்து மூலம் மட்டுமே எதிர்கொண்டு இருக்கலாம். ஆனால் செந்தில் பாலாஜி எல்லை மீறி பேசுகிறார். நாவடக்கமாக பேச வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி யாரையும் இப்படி எல்லாம் பேசியது இல்லை. அவரை போல திமுகவினரும் நடக்க வேண்டும் என்று இணையத்தில் பலர் கூறியுள்ளனர்.

நெட்டிசன்கள்
செந்தில் பாலாஜியின் வாதம் சரியாக இருக்கலாம் .. ஆனால் அதை சொன்ன விதம் தவறு என்று நெட்டின்சன்கள் பலர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்துள்ளனர். மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும் செந்தில் பாலாஜியின் வீடியோவை ஷேர் செய்து விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications